ஆசிரியர் தகுதித் தேர்வு எதிரொலியாக, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களுக்கு, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு, ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரையிலான பாடத் திட்டங்கள் அடிப்படையிலும்; பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு, ஆறாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் அடிப்படையிலும் நடக்க உள்ளது.
இதனால், இவற்றுக்கான பாடப் புத்தகங்களுக்கு, திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நடப்பாண்டில் அமல்படுத்தப்பட்ட பாடத் திட்டங்களில், அதிகமான குறைகள் மற்றும் பிழைகள் இருந்தன. வேறு வழி இல்லாமல், சம்பந்தபட்ட பகுதிகளை கருப்பு மையால் அடித்துவிட்டு, மாணவர்களுக்கு புத்தகங்கள் வினியோகிக்கப் பட்டன. வரும் கல்வியாண்டில், புதிதாக அச்சடிக்கப்படும் பாடப் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.
இப்போதே தேவை: இதனால், தற்போதுள்ள பாடப் புத்தகங்கள், அதிகளவில் இருப்பு இல்லை. மே இறுதியில் தான், பாடப் புத்தகங்கள் தாராளமாக கிடைக்கும். ஆனால், ஜூன் முதல் வாரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடக்க உள்ளதால், இப்போதே படிக்க வேண்டிய கட்டாயத்தில், ஆசிரியர்கள் இருக்கின்றனர். சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள பாடநூல் கழக அலுவலகத்தில், ஏற்கனவே பாடப் புத்தகங்கள் தட்டுப்பாடு இருக்கிறது.
குறிப்பாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான புத்தகங்களில், அதிகளவில் அடித்தல், திருத்துதல் இருப்பதால், அவற்றை விற்பனை செய்யாமல், நிறுத்தி இருந்தனர். கடைகளிலும், பாடப் புத்தகங்கள் கிடைக்காத நிலையில், தேர்வெழுத திட்டமிட்டுள்ள ஆசிரியர்களும், ஆசிரியர் பணியை எதிர்நோக்கி உள்ளவர்களும், பெரிதும் தவித்து வருகின்றனர்.
ஓரிரு நாளில் முடிவு: இதுகுறித்து, பாடநூல் கழக வட்டாரங்கள் கூறியதாவது: திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டிய, எட்டாம் வகுப்பு வரையிலான புத்தகங்கள், இருப்பு குறைந்த அளவே உள்ளன. அவற்றை, அப்படியே விற்பனை செய்ய முடியாது. தேவையில்லாத பகுதிகளை அடித்தும், தவறான கருத்துக்களை சரிசெய்யவும் வேண்டும். இந்தப் பணிகளை செய்தால்தான், புத்தகங்களை விற்பனை செய்ய முடியும். இதுகுறித்து, ஓரிரு நாளில் ஆலோசனை நடத்தியபின் முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
நன்றி : தினமலர்.
No comments:
Post a Comment