திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக இருந்த உடற்கல்வி, தையல், ஓவியம், இசை, தோட்டக்கலை உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள், எஸ்.எஸ்.ஏ., மூலம் நிரப்பப்பட்டுள்ளன.
மொத்தம் 429 சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். விண்ணப்பிக்கும் போதே, அருகாமையிலுள்ள பள்ளிகளில் பணிபுரிய சிறப்பு ஆசிரியர்கள் கேட்டிருந்தனர். ஆனால், நியமன ஆணை வழங்கிய போது, அருகாமை பள்ளிகளில் பணியமர்த்தாமல், மாவட்டத்தின் வெவ்வேறு இடங்களிலுள்ள பள்ளிகளில் நியமிக்கப்பட்டனர்.
மாதம் 5000 ரூபாய் அடிப்படையில் பணிபுரியும் நிலையில், புறநகர் பகுதிகளில் இருந்து திருப்பூர், திருப்பூரில் இருந்து புறநகர் பகுதி பள்ளிகளுக்கு சென்றுவர அதிக பணம் செலவிட வேண்டியுள்ளது.
சிறப்பு ஆசிரியர்களின் சிரமத்தை போக்கும் வகையில், கவுன்சிலிங் மூலம் மாவட்டம் முழுவதும் பணி அமர்த்தப்பட்டுள்ள பகுதிநேர ஆசிரியர்களை அந்தந்த பகுதி பள்ளிகளில் பணியமர்த்த எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர்கள் தங்களுக்குள் கலந்து, "மனம் ஒத்தமாறுதல்', அருகிலுள்ள பள்ளிகளுக்கு "பொது மாறுதல்' பெறும்வகையில் முதன்மை கல்வி அலுவலகம் மூலம் சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
மாறுதல் பெற விரும்பும் சிறப்பு ஆசிரியர்கள், திருப்பூர் பிஷப் உபகாரசாமி மெட்ரிக் பள்ளியில் வரும் மார்ச் 28ல் நடக்கும் இடமாறுதல் "கவுன்சிலிங்'கில் பங்கேற்று, இட மாறுதல் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment