வகுப்பறைக்கு மாணவர்களை பள்ளி நிர்வாகம் அனுப்பாததால், பாடம் நடத்த முடியாமல் ஆசிரியை தனியாக அமர்ந்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தருமபுரி சந்தைப்பேட்டையில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இப் பள்ளியில் முதல் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை 110 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு ஆசிரியையாக ரோஜா உள்ளார். இவர் வகுப்பில் 17 பேர் பயின்று வருகின்றனர். ஆசிரியை ரோஜா புதன்கிழமை காலை வழக்கம் போல பள்ளிக்குச் சென்ற போது, வகுப்பறையில் மாணவர்கள் யாரும் இல்லாமல் வெறிச்சோடி இருந்ததாம். மேலும், மாணவர்கள் அனைவரையும் வேறு வகுப்பில் அமர வைக்கப்பட்டிருந்தது தெரியவந்ததாம்.
இதையடுத்து, அவர் பள்ளி தலைமை ஆசிரியை வெண்ணிலா மற்றும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் நாகராஜன் ஆகியோரிடம் முறையிட்டாராம். ஆனால், இது தொடர்பாக ஆசிரியைக்கு பதிலளிக்க தலைமை ஆசிரியை மறுத்தாராம்.
இதுகுறித்து ஆசிரியை ரோஜா செய்தியாளர்களிடம் கூறியது: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் சந்தைப்பேட்டை நடுநிலைப் பள்ளியில் பணியாற்றி வருகிறேன். இந் நிலையில், இப்பள்ளியில் மாணவர் சேர்க்கைக்காக வரும் பெற்றோர்களிடம், வேறு பள்ளியில் உங்களது குழந்தைகள் சேர்த்துக்கொள்ளுங்கள் என நான் பரிந்துரை செய்வதாக என் மீது பள்ளி தலைமை ஆசிரியை, தொடக்கக் கல்வி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த பொய் புகார் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி நான் புகார் மனு அளித்துள்ளேன். கல்வித் துறை அதிகாரிகள் இதுகுறித்து விசாரித்து வரும் நிலையில், என் வகுப்புக்கு காலையிலிருந்து மாணவர்களை அனுப்பாமல் வேறு இடத்தில் அமர வைத்துள்ளனர். இதற்கான காரணம் எனக்கு தெரியவில்லை என்றார்.
இதுகுறித்து தகவல் அறிந்த உதவி தொடக்கக் கல்வி அலுவலர் நாகராஜன் பள்ளிக்கு வந்து விசாரணை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் கூறியது: சந்தைப்பேட்டை பள்ளியில் ஆசிரியை மற்றும் தலைமை ஆசிரியை இருவரும் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், மாணவர்களை வகுப்புக்கு அனுப்பாமல் இருந்தது தவறு. இது தொடர்பாக தலைமை ஆசிரியைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மாணவர்களை உடனடியாக அவர்களது வகுப்புக்கு அனுப்பப்பட்டனர் என்றார்.
No comments:
Post a Comment