அரசு பணி தேர்வு எழுவோருக்கு உதவும் வகையில், திருப்பூரில் பயிற்சி மையம் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி., குரூப் தேர்வுகள், ரயில்வே, வங்கி பணிகள், வி.ஏ.ஓ., உள்ளிட்ட அரசு பணிகளுக்கு, தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இத்தேர்வுக்கு படிக்கும் மாணவ, மாணவியருக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக, அவ்வப்போது பயிற்சி தரப்படுகிறது; இதற்கான அரங்கமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனினும், இத்திட்டத்தை இன்னும் மேம்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூட (பழைய கலெக்டர் அலுவலகம்) வளாகத்தில், சில மாதங்களாக மாணவ, மாணவியர், காலை முதல் மாலை வரை அமர்ந்து, படிக்கின்றனர். குடிநீர் பாட்டில், மதிய உணவுடன் வரும் அவர்கள், குரூப் ஸ்டடி செய்கின்றனர்; ஒருவருக்கு ஒருவர் தகவல்களை பரிமாறிக் கொண்டு, சந்தேகங்களை தீர்த்துக் கொள்கின்றனர்.
மாவட்ட நிர்வாகம் சார்பில், இதற்கென போதிய வசதிகளுடன் தனியாக பயிற்சி மையம் ஏற்படுத்த வேண்டும்; அவ்வப்போது பயிற்சி என்பதை மாற்றி, முழு அளவில் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அரசு பணி தேர்வுக்கான புத்தகங்கள், அப்டேட் தகவல்களை உடனுக்குடன் அறிய, கம்ப்யூட்டர் வசதியுடன் தனி மையம் ஏற்படுத்த வேண்டும். அனுபவமிக்க ஓய்வு பெற்ற பேராசிரியர்கள், அரசு அதிகாரிகள் மூலம் மாணவ, மாணவியருக்கு பயிற்சி தரவும் முன்வர வேண்டும்.
தனியார் பயிற்சி நிறுவனங்கள் இருந்தாலும், அதிக கட்டணம் என்பதால், ஏழை மற்றும் நடுத்தர மாணவ, மாணவியர் இம்மையங்களை நாடிச் செல்வதில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் தரப்பில், இதற்கான ஏற்பாடு செய்தால், பயனாக இருக்கும் என, அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
No comments:
Post a Comment