தமிழக சட்டசபை தேர்தலின்போது, பார்வையாளர்களாக பணியாற்றிய, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அளித்த அறிக்கை, தேர்தல் கமிஷனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக சட்டசபை தேர்தல், மே 16ம் தேதி நடந்தது. தேர்தல் கமிஷன் சார்பில், தேர்தல் பார்வையாளர்களாக, 118 பொதுப் பார்வையாளர்கள், 32 போலீஸ் பார்வையாளர்கள் மற்றும் செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
தேர்தலில், அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கவும், தேர்தல் நேர்மையாக, அமைதியாக நடைபெறவும் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
தேர்தல் முடிந்த பின், பார்வையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில், தேர்தல் எவ்வாறு நடந்தது? என, தலைமை தேர்தல் கமிஷனருக்கு, அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். அந்த அறிக்கையில், எந்த கட்சி சார்பில், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது, ஒவ்வொரு பகுதியிலும், எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது. பணம் பட்டுவாடா எவ்வாறு நடந்தது; பணம் மட்டுமின்றி, வேறு என்னென்ன பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன
பணம் பட்டுவாடாவிற்கு போலீசார் மற்றும் மாநில அதிகாரிகள் எவ்வளவு ஒத்துழைப்பு வழங்கினர் போன்ற விவரங்களை குறிப்பிட்டு உள்ளனர்.சில தொகுதிகளில், ஓட்டுக்கு, 1,000 ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்டுள்ள விவரத்தையும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். தேர்தல் பார்வையாளர்கள் அளித்த அறிக்கை, தேர்தல் கமிஷனில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் பார்வையாளர்கள் அளித்த அறிக்கையை தொகுத்து, அதில் குறிப்பிடப்பட்டுள்ள தவறுகளை, வருங்காலத்தில் தடுப்பது குறித்து, தேர்தல் கமிஷன் ஆலோசித்து வருகிறது
No comments:
Post a Comment