தனியார் பள்ளிகளுக்கு வழங்க வந்துள்ள பாடப் புத்தகங்களின் விலைப்பட்டியலை, தமிழ்நாடு பாடநூல் கழகம் இன்னும் வெளியிடாததால், பள்ளி வாரியாக புத்தகங்கள் அனுப்புவதில் சிக்கல் எழுந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு, கோபி என இரு கல்வி மாவட்டங்கள் உள்ளன. இரு கல்வி மாவட்டத்திலும் 149 அரசு பள்ளிகள், ஒன்பது நகரவை, 22 நிதியுதவி, எட்டு பகுதி நிதியுதவி, 34 சுயநதி, நான்கு ஆதிதிராவிடர் நலப்பள்ளி, சமூக நலத்துறை பள்ளி ஒன்றும், இரு மாதிரி பள்ளிகள், ஒரு ரயில்வே மிக்ஸ்டு பள்ளி, 140 மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 370 பள்ளிகள் உள்ளன.
கடந்த 2013-14ம் கல்வியாண்டில் பயின்ற ஒன்று முதல் ப்ளஸ் 2 வகுப்பு வரை அனைத்து வகுப்பினருக்கும், முழு ஆண்டு தேர்வுகள் முடிந்து, அனைவரும் கோடை விடுமுறையில் உள்ளனர். அனைத்து வகுப்பினருக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடும் பணியில் கல்வித்துறை தீவிரமாக உள்ளது.
இந்நிலையில், அடுத்த 2014 -15ம் கல்வியாண்டுக்கான புத்தகம் மாவட்டம் வாரியாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனுப்பும் பணி நடக்கிறது. அரசு பள்ளிகளுக்கு வழங்கப்படும் இலவச புத்தகங்கள் அந்தந்த கல்வி மாவட்டம் வாரியாகவும் தனியார் பள்ளிகளுக்கு தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலமும் வழங்கப்பட உள்ளது. அதன்படி, ஈரோடு கல்வி மாவட்டத்தில் உள்ள இரு கல்வி மாவட்டத்துக்கான புத்தகம், சி.இ.ஓ. கட்டுப்பாட்டில், ஈரோடு, ரயில்வே காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பண்டல் பண்டலாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 140 மெட்ரிக் பள்ளிகளுக்கு உண்டான புத்தகங்கள், ஈரோடு அசோகபுரம் தமிழ்நாடு பாடநூல் கழக குடோனில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளுக்கு இலவசமாகவும், தமிழ்நாடு பாடநூல் கழகத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையில், தனியார் பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, டிமாண்ட் டிராஃப்ட் பெற்று புத்தகங்கள் வினியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதேபோல் எஸ்.எஸ்.எல்.சி., வகுப்புக்கு, வரும் 23ம் தேதி, தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளது. தவிர ஜூன் முதல் வாரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் திறக்க இன்னும் 20 முதல் 25 நாட்கள் மட்டுமே உள்ளன.
அரசு பள்ளிகளை காட்டிலும், தனியார் பள்ளிகளில் அட்மிஷன் தீவிரமடைந்துள்ளது. ஆனால் தனியார் பள்ளி மாணவ, மாணவியருக்கு வினியோகிக்கப்படும் புத்தகத்தின் விலைப்பட்டியலை இன்னும் தமிழ்நாடு பாடநூல் கழகம் வெளியிடாமல் உள்ளது. வழக்கமாக, இதுபோன்று புத்தகங்கள் வந்தால் பத்திரிகை மற்றும் மீடியாக்கள் வாயிலாக செய்தியாக பள்ளிகளின் கவனத்துக்கு எடுத்து செல்லப்படும்.
நடப்பாண்டுக்கான புத்தகம் பெறப்பட்டு, புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டும், இன்னும் விலைப்பட்டியல் வராததால், பாடநூல் கழக அதிகாரிகள் வாய் திறக்க மறுக்கின்றனர். தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் இளநிலை உதவியாளர் லோகநாதனிடம் கேட்டபோது, எங்களுக்கு ஒன்றும் தெரியாது. தலைமையகத்தில் இருந்து எங்களுக்கு இன்னும் உத்தரவு வரவில்லை. அவர்கள் அனுமதியில்லாமல் எந்த தகவலும் கூறமுடியாது என்றார்.
No comments:
Post a Comment