சித்தால் கிராமத்தில் உள்ள ரிஷிவந்தியம் மாதிரி பள்ளியில், பிளஸ் 2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி சதவீதம் கிடைத்துள்ளது. இருந்தாலும் பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைத்த பாடில்லை.
மாதிரி பள்ளி
ரிஷிவந்தியம் மாதிரி பள்ளி, 2010ம் ஆண்டு பகண்டை கூட்ரோடு அடுத்த அரியலூர் கிராமத்தில், தனியார் கட்டடத்தில் துவங்கப்பட்டது. கடந்த 2013ம் ஆண்டு முதல் சித்தால் கிராமத்தில், சொந்த கட்டடத்திற்கு மாற்றப்பட்டு இயங்கி வருகிறது. சித்தால் கிராமத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் காடுகளுக்கு நடுவே பள்ளி அமைந்துள்ளது.
100 சதவீத தேர்ச்சி
இந்த கல்வி ஆண்டில், பிளஸ் 2 வகுப்பு பயின்ற 18 மாணவர்களும் பொதுத்தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இந்தாண்டு 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளதால், கடந்த ஆண்டைவிட பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியதால், ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பஸ் வசதி இல்லை
பள்ளியின் தேர்ச்சி சதவீதம் அதிகரித்தாலும், அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. சுற்று வட்டாரத்தில் 15 கி.மீ. தொலைவு பகுதியில் உள்ள மாணவர்கள் இப்பள்ளியில் சேர்ந்து படிக்கின்றனர். பஸ் வசதி இல்லாததால், மாணவர்கள் நடந்தும் சைக்கிளிலும் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். பள்ளிக்கு செல்லும் தார் சாலையில் கற்கள் பெயர்ந்து படு மோசமானதால், இவ்வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி பஞ்சர் ஆகிறது. இங்கு வரும் அனைவரும் ஆட்டோவில் வந்துதான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் இப்பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் சாலையை சீரமைத்து டவுன் பஸ்களை இயக்கிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுற்றுச்சுவர் எப்போது?
பஸ் போக்குவரத்து வசதி இல்லாததால் மாலை நேரத்தில் 2 கி.மீ. தூரம் மாணவர்கள் சித்தால் கிராமத்திற்கு நடந்து சென்று ஒரு மணி நேரத்திற்கும் மேல் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. பள்ளி வளாகத்தை சுற்றிலும் காட்டுப்பகுதியாக இருப்பினும் அதற்கு சுற்றுசுவர் அமைக்கப்படவில்லை. இதனால் ஆசிரியர்கள் முதல் மாணவர்கள் வரை, அனைவரும் அச்சத்துடன்தான் இங்கு வந்து செல்கின்றனர். இப்பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையும் நீடித்து வருகிறது.
அத்தியாவசிய தேவை
கல்வியில் தொடர்ந்து சாதனை படைத்து வரும் இந்த மாதிரி பள்ளிக்கு, பஸ் போக்குவரத்து வசதி, சீரான சாலை வசதி மற்றும் போதுமான அளவில் ஆசிரியர்கள் நியமனம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment