பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியிலேயே ஆன் லைன் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவதற்கான பயிற்சி தலைமை ஆசிரியர்களுக்கு கடலூரில் வழங்கப்பட்டது. அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகள் ஒரே நேரத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய குவிவதைத் தவிர்க்க, அந்தந்த பள்ளிகளிலேயே ஆன் லைன் மூலம் பதிவு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்காக, தலைமை ஆசிரியர்களுக்கு நேற்று கடலூரில் பயிற்சி முகாம் நடந்தது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணி ராஜ் தலைமை தாங்கினார். நேர்முக உதவியாளர் ராஜேந்திரன் முன்னிலையில் வேலைவாய்ப்பு அலுவலர் எக்சனலி, உதவி வேலைவாய்ப்பு அலுவலர் முரளிதரன் ஆகியோர் பயிற்சியளித்தனர்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணிராஜ் பேசுகையில், "வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு பதியக் கூடாது, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு அந்தந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக சங்கேத எண்ணில் பதிவு செய்தால் அந்தந்த மாவட்டத்தில் பதிவாகி விடும். மேலும், ரேஷன் கார்டுகளில் உள்ள விவரங்களை வைத்தே பதிவு செய்ய வேண்டும். மாற்றுத் திறனாளி மாணவர்கள் பள்ளியில் பதிவு செய்தாலும், அவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்குச் சென்று, மாற்றுத் திறனாளிகளுகான சான்றிதழைக் கொடுத்து பதிவினை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்' என்றார். டி.இ.ஓ.,க்கள் வடிவேல், மல்லிகா மற்றும் மாவட்டத்தில் உள்ள 185 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment