சென்னை:
ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டை
அளிக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவை
ஏற்க முடியாது என்று தமிழ்நாடு தனியார்
பள்ளிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்த இட
ஒதுக்கீட்டுக்கான
செலவினத் தொகையை அரசு அளித்தால்
மட்டுமே இட ஒதுக்கீட்டை அளிக்க
முடியும் என்றும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பால் மத்திய அரசு கொண்டு
வந்த இலவச கட்டாய கல்வி
உரிமைச் சட்டம் கேள்விக்குரியதாக மாறியுள்ளது.
தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் செயலாளர் நந்தகுமார் மற்றும் நிர்வாகிகள் இன்று
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தனியார் பள்ளிகளில் ஏழை
மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க
அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த மாணவர்களுக்கான செலவுத்
தொகையை அரசு தனியார் பள்ளிகளுக்கு
வழங்கும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால்,
கடந்த 2 ஆண்டுகளாக 25 சதவீத இடஒதுக்கீட்டில் படித்த
ஏழை மாணவர்களுக்கான செலவுத் தொகையை, தனியார்
பள்ளிகளுக்கு தமிழக அரசு இதுவரை
வழங்கவில்லை. செலவினத் தொகையை அரசு வழங்கினால்தான்
25 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடியும் எனவே,
ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இடஒதுக்கீடு அளிப்பதில்லை
என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு
சார்பில் முடிவு செய்துள்ளோம் என்றார்.
இந்த அறிவிப்பால் இலவச கட்டாய கல்வி
உரிமைச் சட்டம் கேள்விக்குறியாகியுள்ளது. சட்டம் கூறுவது
என்ன... தனியார்கள் பள்ளிகளில், பள்ளி அமைந்துள்ள பகுதியை
சுற்றியுள்ள இடங்களில் வசிக்கும் ஏழைக் குழந்தைகளுக்கு 25 சதவீதம்
கட்டாயம் இட ஒதுக்கீடு அளிக்கவேண்டும்.
அவர்களுக்கான கல்வி கட்டணத்தை அந்தந்த
மாநில அரசுகள் கட்ட வேண்டும்.
ஆனால் அக்கட்டணத்தை அரசு கட்டவில்லை என்று
கடந்த பல மாதங்களாகவே தனியார்
பள்ளிகள் புகார் தெரிவித்து வந்தன.
இந்நிலையில், சில தனியார் பள்ளிகளில்
அரசு கட்டணம் செலுத்தவில்லை என்பதால்
ஏழை மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்ட மாணவர்களை
வகுப்பு வெளியே நிறுத்தி வைத்தும்,
சில பள்ளிகளில் அவர்களை ஒதுக்கப்பட்டவர்களை போன்று
தனியான இடத்தில் அமர செய்து ஏனோதானோவென்று
வகுப்புகளை நடத்தியதாகவும் புகார்கள் வந்தன. இதன்காரணமாக தாங்கள்
மற்ற மாணவர்கள் முன்னர் மிகவும் அவமானப்படுவதாகவும்,
இதனால் தங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதாகவும்
ஏழை மாணவர்கள் கூறிவந்த நிலையில், தனியார் பள்ளிகள் அதிரடியாக,
இனிமேல் செலவினத் தொகையை அரசு வழங்கினால்தான்
25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களை சேர்த்துக்கொள்வோம்
என அறிவித்து விட்டுள்ளனர். அரசு என்ன நடவடிக்கை
எடுக்கப் போகிறது என்பது தெரியவில்லை.
பள்ளிகள் திறப்பதற்கு முன்பே இந்தப் பிரச்சினையை
சரி செய்து ஏழை மாணவர்களின்
கல்வி பாதிக்கப்படாமல் அரசு பார்க்க வேண்டும்
என்று பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.
No comments:
Post a Comment