‘தமிழகத்தில் இந்தாண்டு கல்வி மேலாண்மை மற்றும் தகவல் தொடர்பு அமைப்பு (எமிஸ்) மூலம் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களின் பொதுத் தேர்வு எண்கள் பட்டியல் (நாமினல் ரோல்) தயாரிக்கப்படும்,‘ என தேர்வுத் துறை இணை இயக்குனர் அமுதவல்லி தெரிவித்தார்.
மதுரையில் நேற்று அவர் கூறியதாவது: பள்ளிகளில் அனைத்து மாணவர்களுக்கும் ’எமிஸ்’ எண்கள் கட்டாயம் ஏற்படுத்த வேண்டும். இப்பணிகளை நவம்பருக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பெயர், முகவரி உட்பட ஒரு மாணவருக்கு வழங்கப்படும் ’எமிஸ்’ எண்ணில் 66 தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. புகைப்படம் மற்றும் ஆதார் எண்களும் அதில் இடம் பெறும்.
தற்போது பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான மாணவர் தேர்வு எண் பட்டியல் தேர்வுத்துறை சார்பில் ’ஆப் லைனில்’ சேகரித்து வைக்கப்பட்டுள்ளது.
நவ.,30க்குள் ’எமிஸ்’ பணிகள் முடிக்கப்பட்ட பின் ’ஆன்லைனில்’ மாணவர் தேர்வு எண்கள் பதிவேற்றம் செய்யப்படவுள்ளது.இத்தேர்வு எண் பட்டியல் தயாரிக்க ஒரு மாணவனின் ’எமிஸ்’ எண்ணில் உள்ள 66 தகவல்களில், எட்டு தகவல் மட்டும் போதுமானதாக உள்ளதால் எளிதில் தேர்வு எண் பட்டியல் தயாரிக்க முடியும்.
தேர்வில் தமிழ் அல்லாத விருப்ப பாடத்திற்கான ’குரூப் கோடு’ மட்டும் ’எமிஸ்’வுடன் இணைக்கும் பணி நடக்கிறது.இத்துடன் மாணவர்கள் ஆதார் எண்களும் இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆதார் எண் விடுபட்ட மாணவர்களுக்கு நவ.,23ல் எல்காட் மூலம், அனைத்து மாவட்டங்களிலும் எடுக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, என்றார்.
No comments:
Post a Comment