இந்தியாவில் 5 முதல் 19 வயதுடையவர்களில் 6.54 கோடி பேர் பள்ளிக்கே செல்லவில்லை என்பது கடந்த 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவல் மூலம் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பான விவரம் வருமாறு: 2011-ஆம் ஆண்டைய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 5 முதல் 19 வயது உள்ளோரின் மொத்த எண்ணிக்கை சுமார் 38 கோடியாகும். இதில், 26.98 கோடி பேர் கல்வி பயின்று வருகின்றனர். இது, 71 சதவீதம் ஆகும். ஆனால், 6.54 கோடி பேர் (17.2 சதவீதம்) பள்ளிக்கே செல்லவில்லை. 4.49 கோடி பேர், அதாவது 4.49 சதவீதம் பேர் பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்டுள்ளனர்.
5 முதல் 19 வயதுடைய 38 கோடி பேரில், சுமார் 65.7 லட்சம் பேர் மாற்றுத் திறனாளிகள் ஆவார். இவர்களில், 17 லட்சம் பேர் (26 சதவீதம்) பள்ளிகளுக்கு செல்லாதவர்கள். 8 லட்சம் பேர் (12 சதவீதம்) பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்டவர்கள். மீதமுள்ள 40 லட்சம் பேர் கல்வி கற்று வருகின்றனர். கல்வி கற்கும் மாற்றுத் திறனாளிகளில் 22.8 லட்சம் பேர் ஆண்கள். 17.4 லட்சம் பேர் பெண்கள் ஆவர்.
கடந்த 2001-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 5 முதல் 19 வயது உடையவர்களில் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை 65.3 லட்சமாக இருந்தது. இதில், கல்வி பயின்றவர்கள் 33 லட்சம் பேராக இருந்தனர். 2001 முதல் 2011 வரையிலான பத்து ஆண்டுகளில் கல்வி கற்கும் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment