பிளஸ் 2 வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவு எடுத்து படிக்கும் மாணவர்களுக்கு நாளை முதல் செய்முறை தேர்வு தொடங்குகிறது. 6 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுதேர்வுகள் மார்ச் 5ம் தேதி தொடங்க உள்ளது. கடந்த ஆண்டில் பிளஸ் 2 தேர்வில் 10 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். இந்த ஆண்டும் அதே அளவுக்கு மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
இந்நிலையில், அறிவியல் பாடப் பிரிவை எடுத்து படிக்கும் மாணவர்களுக்கு வேதியியல், இயற்பியல், விலங்கியல், தாவரவியல் உள்ளிட்ட பாடங்களில் செய்முறை தேர்வு நாளை தொடங்க உள்ளது. இந்த தேர்வில் தமிழகம் முழுவதும் சுமார் 6 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்பார்கள். பள்ளிகள் மூலம் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு பிப்ரவரி 5ம் தேதி (நாளை) முதல் 24ம் தேதி வரை செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. தனித் தேர்வர்களுக்கு 25, 26, 27 ஆகிய தேதிகளில் செய்முறை தேர்வு நடக்கும். இதற்கான மதிப்பெண் பட்டியல்களை அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் 3ம் தேதி முதல் 5ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் உத்தரவிட்டுள்ளது.
செய்முறை தேர்வில் வழக்கம்போல கேள்விகள் இடம்பெறும். காலை 9.30 மணிக்கு ஒரு பிரிவும், மதியம் ஒரு பிரிவும் என இரண்டு பிரிவுகளில் செய்முறை தேர்வு நடக்கும். கேள்வித்தாள்கள் செய்முறை தேர்வு நடக்கும் அறையில் மாணவர்கள் முன்னிலையில் பிரிக்கப்படும். வேதியியல் பாடத்துக்கான கேள்வித்தாள் மட்டும் 5 நிமிடத்துக்கு முன்னதாக பிரிக்கப்படும். அப்போதுதான் தேவைப்படும் வேதியியல் பொருட்களை எடுக்க முடியும். செய்முறை தேர்வு நடக்கும் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் அறை கண்காணிப்பாளராக இருக்க முடியாது. புற தேர்வாளர்கள் வருவார்கள். அந்தந்த மாவட்ட டிஇஓ, சிஇஓ கண்காணிப்பு பள்ளிகளுக்கு நேரில் வந்து பார்வையிடுவார்கள். மாவட்டங்களை கண்காணிக்க இணை இயக்குநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment