Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, February 23, 2015

    இந்தியாவில் கல்வித் துறையின் நிலை!

    இந்தியாவில் பள்ளிக் கல்வியின் பரிதாபகரமான நிலையை அண்மையில் வெளியிடப்பட்ட "கல்வித் துறையின் நிலை குறித்த ஆண்டறிக்கை 2014' படம்பிடித்துக் காட்டுகிறது. மூன்றாம் வகுப்பில் 75 சதவீதத்தினர், 5-ஆம் வகுப்பில் 50 சதவீதத்தினர், 8-ஆம் வகுப்பில் 25 சதவீதத்தினர் 2-ஆம் வகுப்புப் பாடத்தை சரியாகப் படிக்கக் கூட முடியவில்லை என அந்த அறிக்கை கூறுகிறது.

    அதேபோல, 3-ஆம் வகுப்பு மாணவர்களில் 75 சதவீதத்தினரால் இரண்டு இலக்க கழித்தல் கணக்குகளையும், 5-ஆம் வகுப்பு மாணவர்களில் 75 சதவீதத்தினரால் வகுத்தல் கணக்குகளையும், 8-ஆம் வகுப்பு மாணவர்களில் 56 சதவீதத்தினரால் 3 இலக்க எண்களை ஓர் இலக்க எண்ணால் வகுக்கும் கணக்குகளையும் போட முடியவில்லை.

    19.5 சதவீத 2-ஆம் வகுப்பு மாணவர்களால் 9 வரையுள்ள எண்களை அடையாளம் காண முடியவில்லை. 75 சதவீத 5-ஆம் வகுப்பு மாணவர்களால் எளிமையான ஆங்கில வாக்கியங்களைப் படிக்க முடியவில்லை என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

    உலகில் உள்ள பல்வேறு நாடுகளை ஒப்பிடும்போது, நம் நாட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) மிகமிகக் குறைவான தொகையே கல்விக்காக ஒதுக்கப்படுகிறது. 1966-இல் கோத்தாரி கமிஷன் அளித்த பரிந்துரையை அரசு ஏற்றது.

    அதன்படி, 1985-இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் கல்விக்கு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 2001 முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் 3.1 முதல் 3.8 சதவீதம் மட்டுமே கல்விக்காக ஒதுக்கப்பட்டது.

    மத்திய அரசின் மனித வளத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரப்படி, கல்விக்கு 2010-11-இல் 2.97 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. இந்தத் தொகை 2011-12-இல் 3.57 லட்சம் கோடியாகவும், 2012-13-இல் 4.10 லட்சம் கோடியாகவும் அதிகரித்தது. 1951-52-இல் கல்விக்கு ரூ.64.46 கோடி ஒதுக்கப்பட்டது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.64 சதவீதமாகும்.

    இது 2010-11-இல் 2.97 லட்சம் கோடியாக அதிகரித்தது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.05 சதவீதமாகும். இந்த காலகட்டத்தில் கல்விக்கான ஒதுக்கீடு 6 மடங்கு அதிகரித்துள்ளது. உலகில் உள்ள 124 நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, இந்தியாவில் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியின் அளவைவிடக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியா கடந்த 20 ஆண்டுகளில் பள்ளிக்குக் கட்டடங்கள் கட்டுதல், வகுப்பறைகள் கட்டுதல், ஆசிரியர்கள் நியமித்தல், பாடப் புத்தகங்கள், மற்ற வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாக "கல்வித் துறையின் நிலை குறித்த ஆண்டறிக்கை 2014' தெரிவிக்கிறது.

    இதற்கு இணையாக 6 முதல் 14 வயதுள்ள குழந்தைகளில் 95 சதவீதத்துக்கும் அதிகமானோர் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

    கல்விக்காக செலவழிக்கப்படும் அதிக நிதியால், நாடு முழுவதும் ஏராளமான பள்ளிகள் கட்டப்பட்டுள்ளன. கல்வி தொடர்பாக 2014-இல் மத்திய அரசு வெளியிட்ட ஒரு புள்ளிவிவர அறிக்கையில், இந்தியாவில் தொடக்கக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை கற்பிக்கும் 14,25,564 கல்வி நிறுவனங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அவற்றில் 7,90,640 தொடக்கப் பள்ளிகளும், 712 பல்கலைக்கழகங்களும், 36,671 கல்லூரிகளும், பட்டயக் கல்வி வழங்கும் 11,445 நிறுவனங்களும் அடங்கும்.

    நாட்டிலுள்ள ஒட்டுமொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 82.68 லட்சமாகும். இதில் 26.84 லட்சம் பேர் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள். 25.13 லட்சம் பேர் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள். 12.86 லட்சம் பேர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள். 17.85 லட்சம் பேர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள்.

    நாட்டில் உள்ள அமைப்பு ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்ட தொழிலாளர்களில் நான்கில் ஒரு பங்கினர் ஆசிரியர்கள் ஆவர். சுமார் 160 நாடுகளில் நமது நாட்டில் உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கையைவிட குறைவான எண்ணிக்கையிலேயே மக்கள் தொகை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இவையெல்லாம் ஒருபுறம் இருப்பினும், மாணவர்கள் தொடர்ந்து ஆர்வத்துடன் கல்வி கற்கும் சூழல் பள்ளிகளில் இல்லை. மத்திய அரசு 2013-14-இல் தொகுத்த புள்ளிவிவரங்களின்படி, 5-ஆம் வகுப்புக்கு முன்னரே 19.8 சதவீத மாணவர்கள் வெளியேறுகின்றனர். 8-ஆம் வகுப்புக்கு முன்னர் 36.3 சதவீதத்தினரும், 10-ஆம் வகுப்புக்கு முன்னர் 47.4 சதவீதத்தினரும் கல்வியைக் கைவிடுகின்றனர்.

    ஒட்டுமொத்தமாகப் பார்த்தோமானால், 80 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கே செல்வதில்லை, 8 கோடி குழந்தைகள் பள்ளிக் கல்வியைப் பாதியிலேயே கைவிடுகின்றனர். இந்த நிலையை "தேசிய அவசரநிலை' என்று வர்ணிக்கிறது ஐ.நா.வின் குழந்தைகள் நிதியம் அமைப்பு.

    குழந்தைகள் இடைநிற்றலுக்கு ஆசிரியர்களும் ஒரு முக்கியமான காரணம் என்பது வேதனை தரும் அம்சமாகும். வகுப்பறைகளில் சுமார் 850 மணி நேரம் ஆய்வு செய்த பின்னர், மாணவர்களுக்கு உகந்த நடைமுறைகளை ஆசிரியர்கள் பின்பற்றுவதில்லை என கல்வி தொடர்பான வருடாந்திர ஆண்டறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

    குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான ஆசிரியர்களுக்கான கையேட்டை மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுக்கான அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

    பேராசிரியர் மாடபூஷி ஸ்ரீதர் ஆய்வின் அடிப்படையில், மாணவர்களுக்கு வழங்கப்படும் உடலையும், மனதையும் வருத்தக்கூடிய தண்டனைகளை மூன்று விதமாக அந்தக் கையேடு பிரித்துள்ளது.

    உடல்ரீதியாகத் துன்புறுத்துவது முதல் வகை. இதில், சுவர் அருகே நாற்காலி போல நிற்கவைப்பது, தலையில் புத்தகப் பைகளை சுமக்க வைப்பது, கடும் வெயிலில் நாள் முழுவதும் நிற்கவைப்பது, முட்டிபோட்ட நிலையில் பணிகளை செய்யச் சொல்வது, மேஜையின் மீது ஏறி நிற்கச் சொல்வது, கைகளைத் தூக்கிக் கொண்டு நிற்கச் சொல்வது, வாயில் பென்சிலை வைத்துக் கொண்டு நிற்கச் செய்வது, கால்களுக்கு இடையில் கையை நுழைத்து காதுகளைப் பிடித்துக் கொண்டு நிற்க வைப்பது, மாணவர்களின் கைகளைக் கட்டுவது, உட்கார்ந்து எழுந்திருக்க வைப்பது, பிரம்பால் அடிப்பது, காதுகளைத் திருகுவது என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

    2-ஆவது வகையானது, உணர்வு ரீதியான துன்புறுத்தலாகும். இதில், எதிர் பாலினத்தைச் சேர்ந்தவரை வைத்து அறையச் சொல்லுதல், திட்டுதல், அவமானப்படுத்துதல், மாணவரின் நடத்தைக்கு ஏற்ப பட்டப் பெயர் சூட்டி, பள்ளியைச் சுற்றிவரச் செய்தல், வகுப்பறையின் பின்னால் நிற்கவைத்து பாடங்களை முடிக்கச் சொல்லுதல், ஓரிரு நாள்களுக்கு பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்வது, "நான் ஒரு முட்டாள்', "நான் ஒரு கழுதை' என எழுதப்பட்ட காகிதத்தை மாணவரின் முதுகில் ஒட்டுவது, ஒவ்வொரு வகுப்பறைக்கும் மாணவரை அழைத்துச் சென்று அவமானப்படுத்துவது ஆகியவை இதில் அடங்கும்.

    3-ஆவது வகையானது எதிர்மறையான உணர்வுகளைப் பதியச் செய்வதாகும். இதில், உணவு இடைவேளை நேரங்களில் வகுப்பறையிலேயே அமரவைத்தல், இருட்டறையில் மாணவர்களை அடைத்துவைப்பது, பெற்றோரை அழைத்து வரச் சொல்லுதல் அல்லது பெற்றோரிடம் இருந்து விளக்கக் கடிதம் பெற்றுவரச் சொல்லுதல், வீட்டுக்குப் போகச் சொல்லுதல் அல்லது பள்ளி வாயிலுக்கு வெளியே நிற்கவைத்தல், வகுப்பறையில் தரையில் மாணவரை அமர வைத்தல், பள்ளி வளாகத்தை சுத்தம் செய்யச் சொல்லுதல், பள்ளிக் கட்டடத்தையோ அல்லது மைதானத்தையோ சுற்றி ஓடிவரச் சொல்லுதல், பள்ளி முதல்வரைச் சந்திக்கச் சொல்லுதல், வகுப்பறையில் பாடம் எடுக்கச் சொல்லுதல், ஆசிரியர் வரும்வரை நிற்கச் சொல்லுதல், வாய்மொழியாக எச்சரிக்கை விடுப்பது அல்லது டைரியில் குறிப்பு எழுதி அனுப்புதல், மாற்றுச் சான்றிதழை (டி.சி.) அளித்துவிடுவேன் என்று மிரட்டுதல், விளையாட்டு அல்லது மற்ற நிகழ்வுகளில் பங்கேற்பதைத் தடுப்பது, மதிப்பெண்களைக் கழிப்பது, 3 முறை தாமதமாக வந்தால் ஒரு நாள் விடுப்பு என்று கூறுவது, அதிகப்படியான வீட்டுப் பாடங்கள் செய்துவரச் சொல்வது, அபராதம் விதிப்பது, வகுப்பறைக்குள் நுழைய அனுமதி மறுப்பது, ஒரு நாள், ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் முழுவதும் ஒரு பாடவேளைக்கு வகுப்பறையில் தரையில் அமர வைப்பது, நடத்தைக்கான அட்டவணையில் கருப்புக் குறியிடுதல் ஆகியவை இதில் அடங்கும்.

    இதைவிட வேதனை தரும் அம்சம் என்னவென்றால், மாணவர்களை பாலியல் ரீதியாகவும் ஆசிரியர்கள் துன்புறுத்துவதுதான். குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளை நமது நாட்டுச் சட்டம் அனுமதிக்கவில்லை. அரசமைப்புச் சட்டத்திலும் குழந்தைகளின் உரிமைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

    சர்வதேச அமைப்புகளும் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் இதேவிதமான கருத்தையே பிரதிபலிக்கின்றன. வயது வித்தியாசம் இல்லாமல், குழந்தைகள் உள்பட அனைவருக்கும் மனித உரிமைகள் பொதுவானது என்பதை ஐ.நா. சபையின் குழந்தைகளின் உரிமைகள் அமைப்பு உறுதிப்படுத்துகிறது.

    மேலும், குழந்தைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும், அவர்களுக்கென்று தனி உரிமைகள் உள்ளன என்றும் ஐ.நா. வலியுறுத்துகிறது.

    துரதிருஷ்டவசமாக, இந்தச் சட்டங்கள் பற்றியும், விதிமுறைகள் பற்றியும் கவலைப்படாமல், ஆசிரியர்கள் குழந்தைகளைத் துன்புறுத்தி பள்ளியை விட்டே ஓடச் செய்கிறார்கள். ஐ.நா. சபை மேம்பாட்டுத் திட்டம் 2012-இல் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் பள்ளியில் மாணவர் படிக்கும் சராசரி ஆண்டுகள் 4.4 ஆகும்.

    இதுவே, இலங்கையில் 9.3 ஆண்டுகளாகவும், சீனாவில் 7.5 ஆண்டுகளாகவும், பாகிஸ்தானில் 4.9 ஆண்டுகளாகவும், வங்கதேசத்தில் 4.8 ஆண்டுகளாகவும் உள்ளன.

    கடும் போட்டியையும், தேர்வு முறையையும் சந்தித்துதான் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தேர்வாகின்றனர். எனவே, அவர்கள் அதிக தகுதிகளைப் பெற்றிருப்பது இயற்கையானதாகும். அவர்களுக்கு நல்ல ஊதியமும், பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

    இத்தகைய சூழ்நிலையில், அவர்களது கடமைகளையும், மாணவர்களின் உரிமைகளையும் ஆசிரியர்களுக்குப் புரியவைப்பதற்கு மன உறுதிதான் தேவை.

    அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரம் குறைந்துவருவது குறித்து அரசு அதிகாரிகளோ அல்லது அரசியல் கட்சியினரோ கவலைப்படுவதில்லை. ஏனெனில், அவர்களது குழந்தைகள் இத்தகைய பள்ளிகளில் படிக்காததால் அவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் இழப்பு எதுவும் இல்லை.

    அப்படி எனில், குற்றவாளிகள் யார்? நெறிதவறிய ஆசிரியர்களா, அரசியல்வாதிகளின் கைப்பாவைகளாகச் செயல்படும் உயர் அதிகாரிகளா, அவர்களை இயக்கும் அரசியல்வாதிகளா அல்லது அவர்களைத் தேர்ந்தெடுக்கும் நாம் தானா?

    - தினமணி கட்டுரை (18.02.2015)

    No comments: