வகுப்பை, 'கட் 'அடித்து விட்டு, மைதானத்தில் விளையாடியதாக, 12 மாணவர்களின் தலையை மொட்டையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரு விட்டல் மல்லையா ரோட்டிலுள்ள, தனியார் உயர்நிலைப் பள்ளி விடுதி ஒன்றில் தங்கியுள்ள, 9 மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில், 12 பேர், தொடர்ந்து, வகுப்பை 'கட்' அடித்ததால், ஹாஸ்டல் வார்டன் மூலம், அவர்களின் தலையை மொட்டையடித்ததாக கூறப்படுகிறது.
மொட்டை அடிக்கப்பட்ட, மாணவர்களில் ஒருவரின் தந்தை அகஸ்டின் கூறியதாவது: என் மூத்த மகன், ஜன., 28ம் தேதி, வகுப்பை, 'கட்' அடிப்பதாக கூறி, ஹாஸ்டல் வார்டன், அவனது தலையை மொட்டை அடித்துள்ளார். இதனால், ஹாஸ்டலை விட்டு வந்து விட்டான். இதனால் கோபமடைந்த வார்டன், 9ம் வகுப்பு படிக்கும், என் இளைய மகனை அழைத்து, அவனது தலையையும் மொட்டை அடித்துள்ளார். இது போன்று, மேலும், 10 மாணவர்களுக்கு மொட்டை அடித்து இருப்பதாக தெரிகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
பள்ளி நிர்வாகி, ரெக்டர் அனில் டிமெல்லோ கூறியதாவது: இவ்விரு மாணவர்கள் தலையிலும் பொடுகு இருந்ததோடு, பேன் தொல்லையும் இருப்பதாக கூறியதால், சுகாதாரம் கருதி, மொட்டை அடிக்கப்பட்டனர். மேலும், ஐந்து மாணவர்களுக்கும் இதே பிரச்னை இருந்ததால், அவர்கள் தலையும் மொட்டை அடிக்கப்பட்டது. மூன்று மாணவர்கள், வேளாங்கண்ணி சென்ற போது, மொட்டை போட்டு விட்டு வந்துள்ளனர். ஹாஸ்டலில் தங்கியிருந்த, ஐந்து மாணவர்களின் சம்மதத்துடன் தான், மொட்டை அடிக்கப்பட்டது. இவ்வாறு, அவர் கூறினார். மத்திய டி.சி.பி., சந்தீப் பாட்டீல் கூறுகையில், "இது தொடர்பாக, புகார் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து, மாணவர்கள் மற்றும் வார்டனிடம் விசாரணை நடத்தவுள்ளோம். இவ்வழக்கில், சட்ட கருத்துக்களையும் கேட்கப்படும்,” என்றார்.
மாணவர்களின் தலை மொட்டை அடிக்கப்பட்டது தொடர்பாக அறிக்கை அளிக்கும்படி, உத்தரவிடப்பட்டு உள்ளது. இன்னும், இரு நாட்களுக்குள் அறிக்கை கிடைக்கும். அறிக்கையின் அடிப்படையில், நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
No comments:
Post a Comment