மருத்துவ நுழைவுத் தேர்வு தொடர்பாக மத்திய அமைச்சரவை பிறப்பித்த அவசரச் சட்டத்திற்கு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற மத்திய அரசு தீவிரம்காட்டி வருகிறது. குடியரசுத் தலைவரை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இன்று நேரில் சந்தித்து, விளக்கம் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தி, அதில் வெற்றிபெறுபவர்களை மட்டுமே மருத்துவப் படிப்புகளில் சேர்க்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, தேசிய தகுதி மற்றும் பொது நுழைவுத் தேர்வு, முதல் கட்டமாக கடந்த ஒன்றாம் தேதியன்று, நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இரண்டாவது கட்டமாக ஜூலை மாதம் 24-ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், பொது நுழைவுத் தேர்வு அடிப்படையில் மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஏற்கனவே அளித்திருந்த தீர்ப்பை உறுதி செய்தது. இதனையடுத்து, இந்த கல்வியாண்டில் மட்டும், மருத்துவ நுழைவுத் தேர்வை நடத்தமால் இருக்க வகைசெய்யும் அவரசரச் சட்டம் ஒன்றை கொண்டுவந்துள்ள மத்திய அரசு, அதனை குடியரசுத் தலைவர் திரு. பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது. இதனையடுத்து, இந்த அவசர சட்டம் குறித்து திரு. பிரணாப் முகர்ஜி, சட்ட நிபுணர்களின் கருத்தை கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவரை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு. நட்டா இன்று நேரில் சந்தித்து விரிவாக எடுத்துரைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment