தீபாவளிக்கு முதல் நாளான, நவம்பர், 9ம் தேதி திங்கள் கிழமை அனைத்து தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு, உள்ளூர் விடுமுறை அளிக்க மாநில தொடக்ககல்வி இயக்குனர் அவர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நாமக்கல் மாவட்ட பொருளாளர் து.ராமராஜ் அவர்கள் தொடக்க கல்வி இயக்குனருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் 385 யூனியன்களிலும் 34515 துவக்கப்பள்ளிகள் 9935 நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. அவற்றில், 50லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்விபயின்று வருகின்றனர்.
மேலும், 2லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அந்த. பள்ளிகளில் பணியாற்றி வருகின்றனர்.
வரும் நவம்பர், 10ம் தேதி தீபாவளி பண்டிகை, நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. அதற்காக, பள்ளிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, புத்தாடை எடுப்பது, இனிப்பு வகைகள் தயாரிப்பது, ஸ்வாமி தரிசனம் செய்வதற்கு கோவிலுக்குச் செல்வது என, தீபாவளி பண்டிகைக்கு முன், ஆயத்தப்பணிகள் மேற்கொள்ள வேண்டி உள்ளது.
மேலும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களும், தங்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்துக்கு தேவையான பொருட்கள் வாங்கும் பணிகளில் ஈடுபட வேண்டும். இந்நிலையில், நவம்பர், 9ம் தேதி திங்கள்கிழமை பள்ளி வேலை நாளாக இருப்பதால், தீபாவளி ஆயத்தப்பணிகளை மேற்கொள்ள போதிய நேரம் இல்லை.
பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர், தீபாவளி ஆயத்தப்பணியை மேற்கொள்வதற்கு வசதியாக, நவம்பர், 9ம் தேதி உள்ளூர் விடுமுறை விட வேண்டும். இந்நிலையில், மாநிலத்தில் உள்ள அனைத்து யூனியன் பள்ளி தலைமையாசிரியர்கள், நவம்பர், 9ம் தேதி உள்ளூர் விடுமுறை விடவேண்டும் என, அந்தந்த ஏ.இ.இ.ஓ.,விடம் கோரிக்கை விண்ணப்பம் அளித்து வருகின்றனர்.
அனைத்து பள்ளிகளுக்கும், உள்ளூர் விடுமுறை விடுவதற்கான அதிகாரம், ஏ.இ.இ.ஓ.,வுக்கு இல்லை என்பதால், தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும், பாதி பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை விட்டு, மீதி பள்ளிகள் செயல்பட்டாலும், மாணவர்கள் வருகை மிக மிக குறைவாகவே இருக்கும்.
எனவே, பல்வேறு தரப்பினரின் சிரமத்தை கருத்தில் கொண்டு, நவம்பர், 9ம் தேதி, மாநிலம் முழுவதும் உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவிட வேண்டும்.
மேலும் கடந்தமாதம் மொஹரம் பண்டிகை 23ந்தேதி வெள்ளிகிழமை என கல்வித்துறை நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டு அன்று அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென முகரம் பண்டிகை 24ந்தேதி சனிக்கிழமை மாற்றப்பட்டு வெள்ளிக்கிழமை ஒருநாள் பள்ளிகள் வேலை நாளாக செயல்பட்டன. எனவே அரசு அறிவித்துள்ள பள்ளி வேலை நாட்களுக்கும் அதிகமாக ஒருநாள் , தற்போது வரை, மாநிலத்தில் உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் செயல்பட்டுள்ளன. அதனால், பள்ளி வேலை நாள் கணக்கில் எந்த பாதிப்பும் ஏற்படாது. மேலும், வெளியூரில் இருந்து இம்மாவட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர், மாணவர்கள் முன்கூட்டியே அவரவர் சொந்த ஊருக்கு சென்று வருவதில் சிரமம் ஏற்படாது.
ஆசிரியர் மற்றும் மாணவர்கள், தீபாவளியை சிறப்பாக கொண்டாடும் வகையில், நவம்பர், 9ம் தேதி தங்கள் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க, மாநில தொடக்க கல்வி இயக்குனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment