வேலூர் விஐடியில் நடைபெற்ற ஆங்கில மொழி கற்பித்தலில் புதிய முறை குறித்த சர்வதேச கருத்தரங்கை சென்னையில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சில் அலுவலர் நீல் சர்க்கார் தொடங்கி வைத்தார். வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை ஆங்கில மொழி மற்றும் இலக்கியம் கற்பித்தலில் கையாளுவதற்கான புதிய முறைகளை உருவாக்குதல் குறித்த இரண்டு நாள் சர்வதேசக் கருத்தரங்கம் விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
விஐடி சமூக அறிவியல், மொழிகள் பள்ளி ஏற்பாடு செய்திருந்த இந்த கருத்தரங்கில் பல்கலை, கல்லூரிகளில் இருந்து சுமார் 400 ஆங்கிலப் பேராசிரியர்கள், இளம் ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர். தொடக்க விழாவுக்கு விஐடி துணை வேந்தர் ஆனந் ஏ.சாமுவேல் தலைமை வகித்தார்.
சென்னையில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சில் மொழிகள் மையத் தலைவர் நீல் சர்க்கார் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது:
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் மொழிகள் கற்றலில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இன்றைய கால கட்டத்தில் மாணவர்கள் செல்லிடப்பேசிகளை மினி கம்ப்யூட்டர்களாக கையாளும் நிலை உள்ளது. அதில் மொழிகளை பதிவு செய்வதற்கான புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும். அதற்கு மொழிகள் கற்றல் மையம் உதவியாக இருக்க வேண்டும் என்றார்.
இதில், இலங்கையில் உள்ள சீறியஸ் அகாதெமியின் மேலாண்மை இயக்குநர் பெர்னாடின் ஜெயசிங்கி கெளரவ விருந்தினராகக் கலந்து கொண்டார். கருத்தரங்கின் நோக்கம் குறித்து அமைப்பாளர் ஆர்.சீனிவாசன் எடுத்துரைத்தார்.
விஐடி சமூக அறிவியல், மொழிப் பள்ளி முதல்வர் பேராசிரியை கே.ரேவதி வரவேற்றார். விஐடி ஆங்கில துறைத் தலைவர் அனிதா தேவி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment