வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் போதுமான வகுப்பறை வசதி, தண்ணீருடன் கூடிய கழிப்பறை வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியருக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்காக ஆய்வு செய்த குழு பரிந்துரை செய்துள்ளது.
குழந்தைகள் இலவசக் கட்டாயக் கல்வி உரிமை சட்டம் 2009 நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து அதை கண்காணிக்கவும், ஆய்வு செய்து மத்திய, மாநில அரசுகளுக்கு ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை அளிக்கவும் தேசியக் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பணிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தமிழகத்தில் சிவகங்கை, ஈரோடு, வேலூர் ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட ஒன்றியங்களில் 2-வது கட்ட ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
வேலூர் மாவட்டத்தில் காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம் ஆகிய 3 ஒன்றியங்களில், தலா 5 ஊராட்சிகள் வீதம் 15 ஊராட்சிகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
ஆணையத்துக்காக மனித உரிமை கல்வி நிறுவனம் சார்பில் இந்த ஆய்வு காட்பாடி ஒன்றியத்தில் கண்டிப்பேடு, பிரம்மபுரம், சேவூர், அரும்பருதி, கார்ணாம்பட்டு ஊராட்சிகள், அணைக்கட்டு ஒன்றியத்தில் தேவிசெட்டிகுப்பம், கரடிகுடி, மகமதுபுரம், ஓங்கப்பாடி, கருங்காலி ஊராட்சிகள், குடியாத்தம் ஒன்றியத்தில் வளத்தூர், உள்ளி, பட்டு, ஒலக்காசி, கருணீகசமுத்திரம் ஆகிய ஊராட்சிகளில் தன்னார்வலர்களுடன் இணைந்து ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டது.
மாவட்ட அளவில் வழக்குரைஞர் சே.பாஸ்கர் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டார்.
ஒருசில பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் 8-ம் வகுப்பு மாணவர்களிடம் ரூ.150-ம், 6 மற்றும் 7-ம் வகுப்பு மாணவர்களிடம் ரூ.125-ம் வசூலிக்கப்படுகிறது. பள்ளிகள் சிலவற்றில் கழிப்பிட பராமரிப்பு சரியில்லை, தண்ணீர் வசதி இல்லை. போதுமான வகுப்பறைகள் இல்லை. மிகவும் பழுதடைந்த கட்டடங்களால் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து நேரிடும் அபாயம் உள்ளது. ஒரு சில பள்ளி வளாகத்தில் ஆக்கிரமிப்புகள் காணப்படுகின்றன. சுற்றுச் சுவர்கள் இல்லை. சமையலறை வசதி இல்லை என்ற விவரங்களை குழு ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
பரிந்துரைகள்
மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், பாதுகாக்கப்பட்ட குடிநீர், தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறைகள், போதுமான வகுப்பறைகள் ஏற்படுத்த வேண்டும்.
பள்ளிகளில் மாணவர்களுக்கான ஊக்கத் தொகைக்கான பட்டியலை வைக்க வேண்டும். பள்ளிகளில் சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள் வருகை பதிவை உறுதி செய்ய தலைமை ஆசிரியர் முன்பாக வருகை பதிவேட்டில் கையொப்பம் இடச் செய்யலாம்.
பெரும்பான்மையான ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் சீருடைகள் வழங்கப்படவில்லை. அவற்றை உரிய நேரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் அனைத்து தனியார் பள்ளிகளிலும் 25 சதவீத இடஒதுக்கீடு விதிமுறைகளின்படி சென்றடைவதை கண்காணிக்க குழு மாவட்ட அளவில் அமைக்க வேண்டும்.
சத்துணவு சாப்பிடாத குழந்தைகளுக்கும் இலவச சீருடை வழங்க வேண்டும். சத்துணவு சாப்பிட மறுக்கும் குழந்தைகளிடம், அதற்கான காரணத்தை கேட்டறிய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய கூட்டறிக்கை ஆட்சியர் பொ.சங்கரிடம் வியாழக்கிழமை ஆய்வுக் குழுவினரால் அளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment