’கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வி, பள்ளிகளில் நவீன உட்கட்டமைப்பு வசதிகள் போன்ற விஷயங்களில், தனியார் பள்ளி கள், பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும்’ என, முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை, வடபழனியில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில், பள்ளிக் கல்வியின் எதிர்காலம் குறித்து கல்வியாளர்கள் மாநாடு நேற்று நடைபெற்றது.
இதில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பாண்டியராஜன், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கல்வி நிலையங்களின் தலைவர் அன்பழகன், தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு செயலர் இளங்கோவன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டுக்கு, முதல்வர் பன்னீர்செல்வம் வாழ்த்துரை அனுப்பியிருந்தார். அதில், ’கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வி, பள்ளிகளில் நவீன உட்கட்டமைப்பு வசதிகள் போன்ற விஷயங்களில், தனியார் பள்ளிகள், பள்ளி கல்வித் துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும்’ என, கூறியுள்ளார்.
மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கல்வி குழும தலைவர் அன்பழகன் பேசுகையில், ”கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்கள், வாழ்வில் தோல்வி அடைகின்றனர். நாம், அவர்களுக்கு மீன் பிடித்து தரக்கூடாது; மீனை எப்படி பிடிக்க வேண்டும் என்பதை கற்று தர வேண்டும்.
வீழ்வது, எழுவதற்கு தானே தவிர, விழுந்து கிடப்பதற்கு இல்லை என்பதை மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும்,” என்றார். கூட்டமைப்பு செயலர் இளங்கோவன் பேசுகையில், ”அகில இந்திய அளவில் நடைபெறும் நுழைவு தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில், 6 முதல், பிளஸ் 2 வரை உள்ள பாடத்திட்டத்தை, மாறி வரும் அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப, செறிவுள்ளதாக மேம்படுத்த வேண்டும்; அதற்கு, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறுகையில், ”கல்வியில் பின்தங்கியிருந்த தமிழகம், தற்போது முன்னேற்ற பாதையில் செல்கிறது. விளையாட்டு, அறிவியல் தொழில் நுட்பம், கலாசாரத்துக்கு, அரசு பள்ளிகளில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பாடத்திட்டம் மாற்றுவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்கும்,” என்றார்.
No comments:
Post a Comment