சென்னையிலுள்ள அரசு கல்லுாரிகளில், பேராசிரியைகளுக்குள், ’சீனியர், ஜூனியர்’ என, கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. அதனால், பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளதாக, மாணவியர் அச்சம் அடைந்துள்ளனர். சென்னையிலுள்ள அரசு கல்லுாரிகளில், பாரதி, காயிதேமில்லத், ராணி மேரி, லேடி வெலிங்டன் மகளிர் ஆசிரியர் கல்வியியல் கல்லுாரி ஆகியவை, மகளிர் கல்லுாரிகளாகும்.
இவற்றில், மாணவியர் பிரச்னையை விட, பேராசிரியைகளுக்குள், யார் சீனியர், ஜூனியர் என, மோதல் போக்கு ஏற்பட்டு உள்ளது. இணை பேராசிரியைகள், துணை பேராசிரியைகள், துறை தலைவர் போன்றோர், கோஷ்டியாக செயல்படுகின்றனர்.
இந்த கோஷ்டிகளில், கல்லுாரி முதல்வர்களும் பின்னணியில் செயல்படுவதாக புகார் உள்ளது. மாணவியருக்கு, ’ராகிங், ஈவ் டீசிங் கூடாது’ என, பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்ட நிலையில், பேராசிரியை மற்றும் ஊழியர்கள் இடையே, ராகிங், ஈவ் டீசிங் நடப்பதாக புகார் எழுந்துள்ளது.
சில பேராசிரியைகள், தங்களுக்கு அரசியல், கல்வித் துறை அதிகாரிகளின் பின்னணி இருப்பதால், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது. இதன் உச்சகட்டமாக, அண்ணாசாலையிலுள்ள காயிதேமில்லத் மகளிர் கல்லுாரியில், போலீஸ் நிலையம் வரை, புகார் வந்துள்ளது.
சில பேராசிரியைகள், பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் இருந்து, வகுப்பில் பாடம் நடத்தாமல், முதல்வரிடம் செல்வாக்கு பெற்று, ஜூனியர்களை மிரட்டுவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவியர் கூறியதாவது:
எங்கள் கல்லுாரியில், ஆசிரியைகளின் பிரச்னையால், மாணவியருக்கு சரியான வழிகாட்டுதல் இல்லை. சீனியர் பேராசிரியைகள், ஜூனியரை ராகிங் செய்வதும், அவர்கள் மேல், கூடுதல் வேலை பளுவை சுமத்துவதும் தொடர்கிறது.
ஒருவரைப் பற்றி மற்றொருவர் குறை கூறுவதும் தொடர்ந்து நடக்கிறது. இவர்கள், தங்களுக்குள் உள்ள கோஷ்டி பிரச்னையால், மாணவியருக்கு, பாடம் எடுப்பதில், அக்கறை காட்டுவதில்லை.
வரலாற்று துறையில், பேராசிரியை ஒருவரின் பணம் மற்றும் ஆவணங்கள், வரலாற்று துறை அலுவலகத்திலேயே, திருட்டு போய் விட்டன. இது குறித்து, அவர் புகார் அளித்தும், துறை தலைவர் விஜயா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உண்மையில் பணம் திருடு போனதா அல்லது கோஷ்டி மோதல் காரணமாக, இது போன்று புகார் அளிக்கப்படுகிறதா என புரியாமல், கல்லுாரி நிர்வாகம் விழிக்கிறது.
இதன் உச்சக்கட்டமாக, பேராசிரியர் ஒருவர், சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையத்தில், பணம் திருடு போவது குறித்து, புகார் அளித்துள்ளார். இதனால், சம்பந்தப்பட்ட பேராசிரியை, சக பேராசிரியைகளால், மிரட்டப்பட்டு வருகிறார்.
போலீசாரும், கல்லுாரி கல்வி இயக்குனரகமும் இதில் தலையிட்டு, பேராசிரியைகளுக்கும், மாணவியருக்கும் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment