அரசு கல்லூரியில் பேராசிரியர்கள் பற்றாக்குறையால் வகுப்புகள் நடத்த முடியாத நிலையில் மாணவர்களின் கல்வி மற்றும் விளையாட்டுத்திறன் கேள்விக்குறியாகிவருகிறது.
2013ல் துவங்கபட்ட முதுகுளத்தூர் அரசு கல்லூரியில் தமிழ், ஆங்கிலம், கணிதம், கம்யூட்டர் சயின்ஸ், கம்யூட்டர் அப்ளிகேசன் ஆகிய 5 துறைகளில் 625 மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு முதல்வர் உட்பட 6 நிரந்தர பேராசிரியர்கள் மற்றும 6 கவுரவ பேராசிரியர்கள் மட்டுமே உள்ளனர். போதிய பேராசிரியர்கள் இல்லாததால் முழு நேரம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த முடியாத நிலை உள்ளது.
இதனால் அவர்களுடைய கல்வித்திறன் கேள்விக்குறியாகி வருகிறது. உடற்கல்வி இயக்குநர் பணியிடம் 3 ஆண்டுகளாக நிரப்ப படாமல் உள்ளதால் விளையாட்டு பயிற்சி பெற வழயின்றி மாணவர்களின் விளையாட்டு திறன் முடங்கி யுள்ளது. கவுரவ பேராசிரியர்களுக்கு 5 மாதமாக சம்பளம் வழங்காததால் அவர்கள் முழு ஈடுபாட்டுன் வகுப்புகள் நடத்துவதில்லை என்ற புகாரும் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதுகுறித்து மாணவர்கள் சிலர் கூறுகையில், கிராமப்புற பகுதிகளை உள்ளடக்கிய முது குளத்தூரில் அரசு கல்லூரி துவங்க பட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக இருந்தும் வகுப்புகள் நடத்த போதிய பேராசிரியர்கள் இல்லாதது வருத்தமளிக்கிறது. உடற்கல்வி இயக்குனர் இல்லாததால் மாணவர்களின் விளையாட்டு திறனும் கேள்விக்குறியாகி உள்ளது, என்றார்.
No comments:
Post a Comment