இதுவரை நடந்த பிளஸ் 2 தேர்வுகளில், அதிகபட்சமாக, நேற்று நடந்த வேதியியல், கணக்குப் பதிவியல் தேர்வுகளில், மாநிலம் முழுவதும், 122 மாணவர்கள், தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டு, பறக்கும் படை குழுக்களிடம் பிடிபட்டனர்.
இவர்களில், திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும், 93 பேர், சிக்கி உள்ளனர். கடந்த 1ம் தேதியில் இருந்து, பிளஸ் 2 தேர்வுகள் நடந்து வருகின்றன. மொழிப்பாட தேர்வுகள், கணிதம், வணிகவியல், இயற்பியல், பொருளியல் ஆகிய தேர்வுகளில், 162 மாணவர்கள், தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டு, பறக்கும் படை அதிகாரிகளிடம் சிக்கினர்.
நேற்று, வேதியியல் மற்றும் கணக்குப் பதிவியல் தேர்வு நடந்தது. சென்னை, அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தேர்வெழுதிய மாணவ, மாணவியர், தேர்வு எளிதாக இருந்ததாக, மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். ஆசிரியர்களும், "வேதியியல் தேர்வு, கடினம் இல்லை. நன்றாக இருந்தது" என, தெரிவித்தனர்.
எனினும், பிட் அடித்து பிடிபடும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை, வழக்கத்திற்கு மாறாக, நேற்று, 122 பேர் சிக்கினர். இதனால், நேற்றுடன், தேர்வு முறைகேட்டில் சிக்கிய மாணவர்களின் எண்ணிக்கை, 284 ஆக உயர்ந்துள்ளது.
நேற்றைய தேர்வில், திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும், 93 பேர் பிடிபட்டுள்ளனர். வேதியியல் தேர்வில், 22 பேரும், கணக்குப் பதிவியல் தேர்வில், 71 பேரும் சிக்கினர்.
No comments:
Post a Comment