கல்லல், சாக்கோட்டை ஒன்றியத்துக்குட்பட்ட 80 சதவீத அரசு தொடக்க நடுநிலை பள்ளிகளில், இடப் பற்றாக்குறை காரணமாக நுாலக வசதி இல்லாத நிலை தொடர்கிறது.
புத்தக வாசிப்பில் மாணவர்களை ஈடுபடுத்த, குறைந்த பட்சம் 500 புத்தகங்கள் இருப்பதோடு, அமர்ந்து படிக்க வசதியுடன் கூடிய அறைகளை நுாலகமாக மாற்ற வேண்டும் என தொடக்க கல்வித்துறை பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
கல்லல், சாக்கோட்டை ஒன்றியத்தில் 20 சதவீத தொடக்க நடுநிலை பள்ளிகளில் மட்டுமே இது போன்ற நுாலகம் உள்ளது. மற்ற பள்ளிகளில் தலைமை ஆசிரியர் அறையில் உள்ள அலமாரி, பீரோவில் ஒரு சில புத்தகங்கள் பராமரிக்கப்படுகிறது. தலைமை ஆசிரியர் அறை என்பதால், மாணவர்கள் இதை எடுப்பதும் இல்லை; படிப்பதும் இல்லை.
அதுமட்டுமன்றி நுாலக வசதி இல்லாத பள்ளிகள் அருகில் உள்ள பகுதி, முழுநேர நுாலகத்தில் இருந்து வாரந்தோறும் 200 புத்தகங்களை பெற்று படிக்க அனுமதி உண்டு. ஆனால், ஆசிரியர் பற்றாக்குறை, பல்வேறு கட்ட பணிச்சுமையால் நுாலகத்துக்கு மாணவர்கள் அழைத்து செல்லப்படுவதில்லை. அதுமட்டுமன்றி புதிதாக தொடங்கப்பட்ட பள்ளிகளுக்கு புத்தகம் வழங்கப்படவில்லை.
ஆசிரியர் ஒருவர் கூறும்போது: மாணவர்களின் கற்றல் திறனில் 42 சதவீத பொது அறிவு வாசிப்பு திறனால் ஏற்படுகிறது. நுாலக அறிவு இல்லாததால், இந்த வாசிப்பு திறன் மங்கி வருகிறது. எதிர்காலத்தில் பொது அறிவை மையமாக வைத்து போட்டி தேர்வு நடத்தப்படும்போது, அரசு பள்ளி மாணவர்கள் இதனால் திணறும் நிலை உள்ளது. ஆரம்பத்தில் நுாலக அறிவு என்றனர். அதன்பிறகு யோகா என்றனர்.
எதையும் முழுமையாக பின்பற்றுவது இல்லை. அரசு பள்ளிகளில் நுாலகத்துக்கு தனி கட்டட வசதியை ஏற்படுத்தி, அதை வேறு பயன்பாட்டுக்கு பள்ளி நிர்வாகம் பயன்படுத்தாதவாறு கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும், அப்போது தான் மாணவர்களின் படிப்போடு, நுாலக அறிவும் மேம்படும்.
No comments:
Post a Comment