காமராஜர் பல்கலை துணை வேந்தராக, பல்கலைகளில் பணியாற்றுவோர் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக, கல்வித்தகுதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தர் பதவி, ஒன்றரை ஆண்டுகளாக காலியாக உள்ளது.
புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய, சென்னை பல்கலையின் ஓய்வு பெற்ற பேராசிரியர் முருகதாஸ் தலைமையில் தேடல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் ஆலோசனை நடத்தி, துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்களை வரவேற்று விளம்பரம் செய்துள்ளனர்.
10 ஆண்டுகள்
கடந்த ஆண்டு அறிவிப்பில், பேராசிரியர் மற்றும் இணை பேராசிரியராக, 10 ஆண்டுகள் பணியாற்றினால் விண்ணப்பிக்கலாம் என, குறிப்பிடப்பட்டு இருந்தது.தற்போது, பேராசிரியர் மற்றும் அதற்கு இணையான பதவியில், 10 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என, கூறப்பட்டுள்ளது.
கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், முதல்வர் பதவி வரை உள்ளோர், அதிகபட்சம் இணைப் பேராசிரியர்கள் நிலை வரையே செல்கின்றனர். பல்கலைகளில் பணியாற்றுவோர், பேராசிரியர் என்ற பதவியை பெறுகின்றனர். அதனால், கல்லுாரி இணைப் பேராசிரியர்கள், துணைவேந்தராக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, நெட், செட் சங்க பொதுச்செயலர் நாகராஜன் கூறியதாவது:
கல்லுாரியின் இணைப் பேராசிரியர்கள், துணைவேந்தர் பதவிக்கு வர வேண்டும் என்றால் அவர்கள் பல்கலை பேராசிரியராக பணியாற்றி, அதன்பின், துணைவேந்தர் பதவிக்கு வரலாம்.
முற்றுப்புள்ளி
பல்கலையை நிர்வகிக்கும் பொறுப்புக்கு வரும்போது, பல்கலையில் நேரடியாக பணியாற்றிய அனுபவம் தேவை. எனவே, கல்வித்தகுதியை மாற்றம் செய்ய தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
காமராஜர் பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் கல்யாணி மதிவாணன், இணைப் பேராசிரியர் என்ற தகுதியுடனே பதவிக்கு வந்தார். இந்த பிரச்னை, நீதிமன்றம் வரை சென்றதால் தற்போது சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது.
No comments:
Post a Comment