தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, தொடர்ந்து அதே இடத்தில் நீடிப்பதால் கடலோர மாவட்டங்களில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பலத்த, மிக பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது: குமரிக் கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, மேற்கு நோக்கி நகர்ந்துள்ளது. இது, திங்கள்கிழமை காலை 8.30 மணியளவில் லட்சத்தீவு கடல் பகுதி, அதை ஒட்டிய மாலத்தீவு பகுதியில் தாழ்வு நிலையாக நீடிக்கிறது.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில், ஞாயிற்றுக்கிழமை புதிதாக உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, திங்கள்கிழமை காலை 8.30 மணியளவில் தொடர்ந்து அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது.
மிகப் பலத்த மழைக்கு வாய்ப்பு: இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம், புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களில் அனேக இடங்களிலும் மழையை எதிர்பார்க்கலாம்.
அதேபோல், கடலோர மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் பலத்த, மிக பலத்த மழையும் பெய்யு வாய்ப்பு உண்டு. அதாவது, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் பலத்த, மிக பலத்த மழை பெய்யும்.
அடுத்து வரும் 2 நாள்களுக்கு, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்பட தென் கடலோர தமிழகத்தில் ஆங்காங்கே பலத்த மழை பெய்யும் வாய்ப்புள்ளது. சென்னை மாநகரைப் பொருத்தவரை, பொதுவாக வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாநகரில் ஒரு சில நேரங்களில், மழை அல்லது இடியுடன் கூடிய பலத்த மழை இருக்கும்.
எச்சரிக்கை: தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதியில், வடகிழக்கு, கிழக்கு திசையிலிருந்து மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு நிலையால், மீனவர்கள் கடலுக்குள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்றார் எஸ்.ஆர்.ரமணன்.
No comments:
Post a Comment