தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்ட (ஆர்.எம்.எஸ்.ஏ.,) நிதியில், ரூ.பல லட்சம் முறைகேடு நடப்பதை தடுக்க கல்வித்துறை செயலாளர் சபீதா நடவடிக்கை எடுப்பாரா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.இத்திட்டத்தில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளிகளில், ஆண்டுதோறும் பள்ளி பராமரிப்பு மானியம் ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதில் இருந்து மாணவர் நலன் கருதி பள்ளி நுாலகங்களுக்கு ரூ.7,500க்கு புத்தகங்கள், அறிவியல் ஆய்வகங்களுக்கு ரூ.15 ஆயிரத்திற்கு அறிவியல் உபகரணங்கள் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
'புத்தகங்கள், உபகரணங்களை சில தனியார் கம்பெனிகளில் மட்டும் வாங்க வேண்டும்,' என சில அமைச்சர்கள் பெயரை குறிப்பிட்டு தலைமையாசிரியர்களுக்கு அரசியல்வாதிகள் நெருக்கடி கொடுக்கின்றனர். பணியாத தலைமையாசிரியர், கல்வி அதிகாரிகளிடம் "'டிரான்ஸ்பர்' செய்து விடுவோம்," என மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால், வேறு வழியில்லாமல் புத்தகம், உபகரணங்களை பெற்றுக்கொண்டு, அதற்காக அந்த கம்பெனிகளுக்கே ரூ.22500 க்கான காசோலையை பள்ளிகள் அனுப்பி வைக்கின்றன.
கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: பல ஆண்டுகள் ஒரே மாதிரியான உபகரணங்களையே மீண்டும் மீண்டும் பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றனர். பல பள்ளிகளில் சாக்கு மூட்டைக்குள் அப்பொருட்கள் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன.இதற்கு காரணம் அரசியல்வாதிகள் ஆதரவில் பெயரளவில் செயல்படும் சில கம்பெனிகள் தான். பள்ளிகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கமிஷனாக பெற்றுக்கொண்டு கல்வி அதிகாரிகளை அவர்கள் மிரட்டுகின்றனர். இதுகுறித்து விசாரித்து செயலாளர் சபீதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment