குமரி கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் மேலும் 2 நாள்களுக்கு மழை நீடிக்கும். குறிப்பாக, தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது: கடந்த சில நாள்களாக, இலங்கை, வட தமிழகம் ஒட்டியுள்ள தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது வலுவிழந்தது. சனிக்கிழமை காலை 8.30 மணியளவில், இது தமிழகத்தை ஒட்டிய இலங்கை, குமரிக் கடல் பகுதியில் வலுவிழந்து காற்றழுத்தத் தாழ்வு நிலையாக நீடிக்கிறது. இதனால், தமிழகம், புதுச்சேரியில் அனேக இடங்களில் மழை பதிவாகியுள்ளது.
பலத்த மழைக்கு வாய்ப்பு: அடுத்த 24 மணி நேரத்தில் அனேக இடங்களில் மழையை எதிர்பார்க்கலாம். கடலோர மாவட்டங்கள், தென் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யும். சிவகங்கை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் 2 நாள்கள் பலத்த மழைக்கு வாய்ப்புண்டு. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாநகரில் விட்டு விட்டு மழை பெய்யும்.
எச்சரிக்கை: கடலோரப் பகுதியில், வடகிழக்கு திசையிலிருந்து மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு நிலையால், தென் கடலோர மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம். அதேபோல், வட கடலோர மீனவர்கள் மிகுந்த கவனத்துடன் கடலுக்குள் செல்ல வேண்டும். இந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, மேலும் வலுப்பெற வாய்ப்பில்லை என்றார் எஸ்.ஆர்.ரமணன்.
No comments:
Post a Comment