ஓட்டுச்சாவடி அலுவலருக்கான தேர்தல் பயிற்சி முகாமில் பங்கேற்காமல் ஆப்சென்ட்டான, 120 அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கு, தேர்தல் கமிஷன் உத்தரவுபடி, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், ப.வேலூர், திருச்செங்கோடு ஆகிய ஐந்து தாலுகா தலைமை இடத்தில், 1,475 ஓட்டுச்சாவடியில் பணியாற்றும் அலுவலர்களுக்கான சிறப்பு பயிற்சி, நேற்று முன்தினம் வழங்கப்பட்டது.மொத்தமாக பயிற்சி பெற வேண்டிய, 7,215 பேரில், நாமக்கல், 1,298 பேரில், 19 பேர் ஆப்சென்ட், ராசிபுரம், 1,133 பேரில், 29 பேர் ஆப்சென்ட், சேந்தமங்கலம், 1,290 பேரில், 26 பேர் ஆப்சென்ட், ப.வேலூர், 1,152 பேரில், 19 பேர் ஆப்சென்ட், திருச்செங்கோடு, 1,170 பேரில், இரண்டு பேர் ஆப்சென்ட் என, மொத்தமாக, 120 பேர் எவ்வித முன்அனுமதியும் இன்றி ஆப்சென்ட் ஆனார்கள்.மேலும், பயிற்சி வழங்கப்பட்ட ஐந்து இடங்களுக்கும், 300க்கும் மேற்பட்ட அலுவலர் மற்றும் ஆசிரியர்கள் உரிய நேரத்திற்கு பயிற்சிக்கு வராமல், இரண்டு மணி நேரம் தாமதமாக வந்தனர். அதனால், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தட்சிணாமூர்த்தி, உரிய நேரத்தில் பயிற்சியை ஆய்வு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.தேர்தல் விதிமுறைகளின்படி, ஓட்டுச்சாவடிக்கு நியமிக்கப்பட்ட அலுவலர், அவருக்கு ஒதுக்கப்பட்ட பணியை சரியாக செய்யவில்லை அல்லது தவிர்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, சம்பந்தப்பட்ட அலுவலருக்கு வழங்கப்பட்ட பயிற்சி அனுமதி சான்றில் எழுதப்பட்டதுள்ளது.இந்நிலையில், பயிற்சியில் பங்கேற்காத மற்றும் ஆப்சென்ட்டான அலுவலர் மற்றும் ஆசிரியருக்கு, தேர்தல் கமிஷன் உத்தரவுபடி, பயிற்சிக்கு வராததற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து, தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஓட்டுச்சாவடி அலுவலருக்கான பயிற்சியில் பங்கேற்காமல், ஆப்சென்டான, 120 அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கு, பயிற்சியில் பங்கேற்காமல் புறக்கணித்ததற்கான விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வருகிறோம். காலதாமதமாக வந்த, 300க்கும் மேற்பட்டோர், வருகைப்பதிவில் கையெழுத்து போட்டுவிட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், பஸ் தாமதம், மருத்துவமனைக்கு சென்றேன் உள்ளிட்ட காரணங்களை கூறி தப்பித்துக் கொண்டனர். ஆப்சென்ட் ஆனவர்கள், தேர்தல் கமிஷன் விதிப்படி, ஒதுக்கப்பட்ட பணிக்கு வராததது குறித்து, தெளிவான விளக்கம் தர வேண்டும். அந்த விளக்கம் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு திருப்தியாக இல்லை என்றால், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment