தங்கள் கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்ற தவறியதால் வருகிற அக்டேபார் 8 அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளையும் மூடி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாட்டில் தொடக்கக்கல்வி முதல் மேல்நிலைப்பள்ளி வரையுள்ள ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேக்டோ) அறிவித்துள்ளது. இது குறித்து சிவகங்கை மாவட்ட ஜேக்டோ உயர்மட்டக் குழு உறுப்பினரும், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளருமான முத்துப்பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது.
தமிழ்நாட்டு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் கோரிக்கைகளான தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், 2011 சட்;டமன்றத் தேர்தல் பரப்புரையில் தமிழக முதல்வர் உறுதியளித்த தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்திட வேண்டும், தொகுப்பூதியத்தில் பணியமர்த்ப்பட்ட ஆசிரியர்களின் தொகுப்பூதிய காலத்தை பணிவரன்முறை செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அரசாணை 266ஐ திருத்தம் செய்து தமிழ்ப் பாடத்தை முதல் பாடமாக வைக்க வேண்டும், ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கிட வேண்டும், தொடக்கக்கல்வி முதல் மேல்நிலைப்பள்ளி வரை தாய்மொழிக்கல்வியான தமிழ் வழிக் கல்வியை அமுல்படுத்திட வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டார அளவில் , மாவட்ட அளவில், மாநில அளவில் பல்வேறு போராட்டங்களை தனிச்சங்க நடவடிக்கையாகவும், ஜேக்டோ மூலமும் நடத்தி முடித்து உள்ளோம். ஆனால் அரசாங்கம் இதுவரை ஜேக்டோ உயர்மட்ட குழு உறுப்பினர்களை அழைத்து எங்களது நியாயமான கோரிக்கைகள் குறித்து எவ்வித பேச்சு வார்தையும் நடத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறது. எனவே எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வருகிற அக்டோபர் 8ந் தேதி அன்று சிவகங்கை மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை உள்ள சுமார் 1400 பள்ளிகளைச் சார்ந்த 6000த்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், தமிழக அளவில் சுமார் 53,000 பள்ளிகளைச் சார்ந்த 3.5 இலட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் பங்கேற்பார்கள். இந்த வேலை நிறுத்தத்தில் மொத்தம் 28
ஆசிரியர் சங்கங்கள் பங்கேற்கின்றன. தொடர்ந்து அரசாங்கம் மௌனம் சாதித்தால் ஜேக்டோ மாநில உயர்மட்டக்குழு கூடி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கும் என அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment