பாரதியாரின் நினைவு நாள் 93 ஆண்டுகளுக்கு பிறகு செப்டம்பர் 11 லிருந்து செப்டம்பர் 12க்கு மாற்றப்பட்டுள்ளது. தேசியகவி பாரதி 1882ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பிறந்தார். தனது பாடல் வரிகளால் தமிழக மக்களை தட்டி எழுப்பிய பாரதி சென்னை திருவல்லிக்கேணியில் 1921ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி அதிகாலை 1.30மணிக்கு இறந்தார்.
அன்றிலிருந்து இன்று வரை பாரதியாரின் நினைவு தினம் தமிழகம் முழுவதும் செப். 11ம் தேதி அனுசரிக்கப்பட்டது. பாரதியார் இறந்து சுமார் 93 வருடங்கள் கடந்து விட்ட நிலையில், அரசு தற்போது அவரது நினைவு தினத்தை செப்டம்பர் 12ம் தேதி அனுசரிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.
இதையடுத்து, எட்டயபுரத்தில் உள்ள பாரதி பிறந்த வீடு, மற்றும் நினைவு மண்டபத்திலுள்ள கல்வெட்டுகளில் நினைவு தினம் குறித்த தேதி மாற்றப்பட்டது. இது குறித்து பாரதி அன்பர்கள் கூறுகையில்,‘‘பாரதியார் செப்டம்பர் 12 அதிகாலை 1.30 மணிக்கு இறந்தார். பொதுவாக தமிழர்கள் வழக்கப்படி சூரிய உதயத்திற்கு பின் தான் மறுநாள் கணக்கில் கொள்ளப்படும். அதன்படி அவர் இறந்த நாளான செப்டம்பர் 11ம் தேதி நினைவுநாளாக அனுசரிக்கப்பட்டது. ஆனால், தற்போது ஆங்கில தேதி வழக்கப்படி இரவு 12 மணிக்கு மேல் மறுநாள் என்ற அடிப்படையில் செப்டம்பர் 12ம் தேதி நினைவு நாளாக அரசு அறிவித்திருக்கிறது‘‘ என்றனர்.
1 comment:
மகாகவியே, உன் நினைவுதினத்திலும் குழப்பம் ஏற்படுத்தும் இந்த மானிடர் சமூகம் நீ அல்ல உன்னைப்போல் ஆயிரம்பேர் வந்தாலும் திருந்துமா
Post a Comment