Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, June 10, 2013

    அரசுப் பணியில் சேர என்ன தகுதி வேண்டும்? ஆர்.நட்ராஜ், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர்

    அரசு அலுவலகம் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது நூலாம்படை படர்ந்த சுவர்கள்; வெற்றிலை பாக்கு உமிழ்ந்த இடங்கள்; அங்குமிங்குமாக கிடக்கும் மேஜைகள், நாற்காலிகள்; குவிக்கப்பட்ட கோப்புகள்; உடைந்த நாற்காலியில் ஒரு காலை சம்மணமிட்டு தூங்கி வழியும் அலுவலர். பரபரப்போ அவசரமோ
    இல்லாத நிதானமான தாமதமான சூழல், அரசு அலுவலகத்துக்கான முத்திரை என்றாகிவிட்டது. இந்தியாவில் எங்கு சென்றாலும் இதே நிலைதான்.

    பின்தங்கிய மாநிலங்களில் அரசு அலுவலரின் அணுகுமுறை பற்றி வேடிக்கையாகக் குறிப்பிடுவார்கள், முதலில் சொந்த வேலை, பிறகு நண்பரின் வேலை, நேரம் இருந்தால் அரசாங்க வேலை!

    இந்த நிலை மாறவேண்டும். அதற்காகத்தான் வருடாவருடம் அரசு இயந்திரத்திற்கு எண்ணெய் போடுவதுபோல், உடம்பிற்கு ரத்தம் பாய்ச்சுவது போல இளைஞர்களை, நல்லவர்களை, வல்லவர்களை, நேர்மையானவர்களை அரசுப் பணிக்குத் தேர்வு செய்யும் முறை அரசியல் சாசனத்திலேயே வரைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

    ‘எதற்காக அரசுப் பணியில் சேர விரும்புகிறா?’ என்று கேட்கும் கேள்விக்கு தேர்வர்கள் கொடுக்கும் பதில் ஒன்றுதான் - ‘மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன்’. உணர்ந்து சொல்கிறாரோ இல்லையோ, ‘சேவை’ என்ற பதில் வருகிறது. சந்தோஷம்.

    அரசுப் பணி மகத்தான பணி என்பதில் சந்தேகமில்லை. அரசு அலுவலகங்களில் நாம் சாதாரணமாகப் பார்க்கும் காட்சி எங்கு பார்த்தாலும் கோப்புகள். ஆனால், கோப்புகள் பின்னால் மக்களின் வாழ்வாதாரம் அடங்கியுள்ளது என்பது உணரப்படுவதில்லை.

    உரிய நேரத்தில் முடிவுகள் எடுத்தால்தான் பயனளிப்பு மக்களுக்கு சென்றடையும். இத்தகைய அணுகுமுறையோடு பணியில் சேர்பவர்களே சிறந்த அரசுப் பணியாளர்கள் எனலாம்.

    தொழில்நுட்ப அறிவு, நேர்மை, செயலாக்கத்திறமை இவை ஒரு பணியாளரிடம் ஒருங்கிணைந்திருக்க வேண்டும். இதை சோதித்து தெரிவு செய்வது மிக அவசியம். இதை விரைவாக, வெளிப்படையாக, நேர்மையாக, திறமையாக நிறைவு செய்ய வேண்டிய முக்கியப் பணி தேர்வாணையத்தினுடையது.

    ஏதோ ஒரு வேலை கிடைத்தால் போதும் என்று நினைப்பவர்கள் சிலர். அரசுத் துறைக்கு வந்தால், சமுதாயத்தில் ஒரு மரியாதை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு சிலரிடம். அரசுப் பணி, நிரந்தரப் பணிக்கு உத்தரவாதம் உண்டு என்ற நம்பிக்கை பலரிடம். தமது பணி மூலம் சமுதாயத்தில் நலிந்தவர்களுக்கு உதவ வாய்ப்பு இருப்பதால், மனதுக்கு திருப்தி அளிக்கும் என்பதால், அரசுப் பணிக்கு வருபவர்கள் வரவேற்கப்பட வேண்டியவர்கள். அரசு அலுவலகங்களில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் மற்றவர்களுக்கு ஏற்படக்கூடாது, தான் அரசுப் பணியில் சேர்ந்து மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று நினைப்பவர்கள் திறமையாக செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

    நம் இளையதலைமுறையிடம் பல நல்ல திறமைகள் இருக்கின்றன. குடும்பத்தோடு பிணைப்பு இருக்கிறது. பெற்றோர்களை மதிக்கிறார்கள். திருமணம் முடிந்து, தேர்வு எழுதும் பல பெண்கள் புகுந்த வீட்டின் பெருமையைக் கூறுகிறார்கள். தமது கணவன்மார்கள் தம்மை ஊக்குவிப்பதில் பெருமை கொள்கிறார்கள். தேர்வர்களிடம் நேர்காணலில் உரையாடும்போது வெளிப்படும் இத்தகைய உணர்வுகள், மனதுக்கு நிறைவு கொடுக்கிறது. நிச்சயமாக இவர்கள் அரசுப் பணியில் சிறப்பாகப் பணிபுரிவார்கள்.

    பணியாளர்களை தெரிவு செய்வதற்கு எழுத்து மூலத் தேர்வு, நேர்காணல் என்ற வடிகட்டும் முறையை எல்லா தேர்வாணையங்களும் மேற்கொள்கின்றன. தேர்வு முறை எவ்வாறு இருக்கவேண்டும் என்பதில் பல ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. அரசுப்பணிக்கு எத்தகைய கல்வித் தகுதி, திறமைகள், அனுபவம் தேவை போன்றவற்றைக் கணக்கிட்டு அந்தந்தப் பதவிக்கு ஏற்றவாறு தேர்வு நடத்தப்படுகிறது. இத்தகைய தேர்வில் என்ன கேட்கப்படுகிறதோ, அதற்கான பதில் ஆய்வு செய்யப்பட்டு அதற்கு மதிப்பெண் கொடுக்கப்படுகிறது. மதிப்பெண் பெற்றவரின் தர வரிசை தயார் செய்யப்படுகிறது. தர வரிசை ஒவ்வொரு இடஒதுக்கீட்டுப் பிரிவிற்கும் தனித்தனியே தயாரிக்கப்படுகிறது.

    தர வரிசை அடிப்படையில் ஒன்றுக்கு இரண்டு அல்லது ஒரு பதவிக்கு மூன்று நபர் என்ற அளவில் நேர்காணலுக்கு அழைக்கப்படுகின்றனர். நேர்காணல் மதிப்பெண் மற்றும் எழுத்துத் தேர்வு மதிப்பெண் கூட்டப்பட்டு முடிவான தர வரிசை தயாரிக்கப்படுகிறது. இவை அத்தனையும் பிரத்யேக மென்பொருள்களில் வடிவமைக்கப்பட்டு கணினி மூலம் பெறப்படுகிறது.

    ஒருவரது அறிவாற்றல், புலனுணர்வு இவற்றை தேர்வுகள் மூலம் கணிக்கலாம். அறிவாற்றலுக்கு அப்பாற்பட்ட முக்கிய குணாதிசயங்கள், சமயோசித நடத்தை, இயல்பான அறிவு, கலையுணர்வு போன்றவை இத்தகைய தேர்வுகளில் வெளிப்படுவதில்லை. தன்னலமின்றி பொது நலத்தில் விருப்பம் உடையவர் அரசுப்பணிக்கு வந்தால் மாற்றம் விரைவில் ஏற்படும்.

    நேர்காணலை எதிர்கொள்வது ஒரு கலை எனலாம். இப்போதெல்லாம் பல பணிகளுக்கு தொலைபேசி மூலமாகக்கூட உரையாடி மதிப்பிடுகிறார்கள். ஆனால், நேர் சந்திப்பில் முதலில் கவனிக்கப்படுவது, தேர்வர் எவ்வாறு அறைக்குள் வருகிறார், எவ்வாறு நடக்கிறார், வாழ்த்துக்களை எவ்வாறு தெரிவிக்கிறார், அமரும் முறை எல்லாம் உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றன. ஏதோ கல்யாண வரவேற்புக்குச் செல்வதுபோல் ஆடம்பரமாக உடை உடுத்தவேண்டிய அவசியமில்லை. அதே தருணம், பழைய கசங்கிய உடையும் நிச்சயமாகத் தவிர்க்கப்படவேண்டும். நாகரிகமான உடை, பளிச் என்று முகம், நம்பிக்கையான தோற்றம் இவை உடனடியாக எவரையும் கவரும். வாய் முணுமுணுக்கப் பேசக்கூடாது. தெளிவாக, மெதுவாகக் கேட்கப்படும் கேள்விகளைப் புரிந்துகொண்டு விவரமாக பதிலளிக்கவேண்டும். எல்லாக் கேள்விகளுக்கும் விடை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தெரியவில்லை என்று உண்மையை ஒப்புக்கொள்வது நல்லது. அதற்காக எல்லாக் கேள்விகளுக்கும் பதில் தெரியவில்லை என்றாலும் தப்பான அபிப்பிராயம் ஏற்படும். ஒன்று தெரியவில்லை என்றால், அதோடு இணைந்ததை சமயோசிதமாகக் கூறி விவாதிப்பது நல்ல அணுகுமுறை.

    நேர்காணல் என்பது கருத்துப் பரிமாற்றமாக அமையவேண்டும். தேர்வரது எண்ணங்கள், எவ்வாறு அதை வெளிப்படுத்துகிறார், கருத்துக்களை சமன் செய்யும் முறை இவை கவனிக்கப்படுகின்றன. அவரது கல்வித் தகுதி, மற்ற துறைகளில் ஈடுபாடு போன்றவையும் கணக்கில் கொண்டு நேர்காணலுக்கு மதிப்பெண் அளிக்கப்படுகிறது.

    சுவாமி விவேகானந்தர் கல்வியைப் பற்றிக் கூறியது எவ்வளவு உண்மை! ‘கல்வி மனிதனிடம் உள்ள முழு வளர்ச்சியின் வெளிப்பாடு’. அந்த முழுமை வெளிப்படவேண்டும். கல்வியை முழுமையாகப் பெற்றவர்கள், முழுமையான ஆளுமை உடையவர்கள் அரசுப்பணிக்கான தேர்வுகளில் கலந்துகொள்ள வேண்டும்.

    மக்கள் சேவையே மகேசன் சேவை. மக்கள் சேவையை தலையாய கடமையாகக் கொண்ட இளம் ஆண்களும், பெண்களும் துணிவாக முன்வந்து அரசுப் பணியாற்ற முன்வர வேண்டும்.

    No comments: