இந்தியாவில் செயல்படும் பல சர்வதேச நிறுவனங்கள், திறமையான ஊழியர்கள் கிடைக்காததால், காலிப் பணியிடங்களை நிரப்ப முடியாத சூழ்நிலையில் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மென்பவர் குரூப் என்ற நிறுவனம், சர்வதேச அளவிலான வேலைவாய்ப்பு குறித்த ஆய்வை நடத்தியது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் செயல்படும் நிறுவனங்களில் பல, போதிய அளவு திறமையான ஊழியர்கள் இல்லாமல் திணறி வருகின்றன. இதனால், 58 சதவீத நிறுவனங்கள் போதிய வேலைவாய்ப்புகள் இருந்தும், திறமையான ஊழியர்கள் இல்லாததால், காலிப்பணியிடங்களை நிரப்ப முடியாத நிலையில் உள்ளன.
தகவல் தொழில்நுட்பம், நிதித்துறை, நட்சத்திர ஓட்டல்களின் வரவேற்பாளர்கள், ஆசிரியர், நிர்வாக உதவியாளர், விற்பனை மேலாளர், இன்ஜினியரிங் போன்ற பணிகள் மற்றும் பல துறைகளில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன.
இத்துறைகள் தொடர்பான படிப்பில், தேர்ச்சி பெற்றவர்களும் ஏராளமாக உள்ளனர். ஆனால், இவர்களில் திறமைசாலிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளன.
சர்வதேச நாடுகளை பொறுத்தவரை, ஜப்பானில்தான், 83 சதவீத நிறுவனங்கள் கடுமையான ஆள் பற்றாக்குறையுடன் இயங்குகின்றன.
இதற்கு அடுத்தபடியாக, பெரு நாட்டில் 68 சதவீத நிறுவனங்களும், ஹாங்காங்கில் 65 சதவீத நிறுவனங்களும் திறமையான ஊழியர்கள் இல்லாமல் சிக்கலுக்கு ஆளாகியுள்ளன. இவ்வாறு, ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment