ஆர்ப்பாட்டம், வேலைநிறுத்தம் போன்ற போராட்டங்களின் போது, பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு, அதிகபட்சம், 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட திருத்தங்கள் மேற்கொள்ள, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பொதுச் சொத்துகளை போராட்டக்காரர்களிடம் இருந்து காப்பாற்ற தேவையான இந்த சட்டம் குறித்து, பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.அரசியல் தலைவர்கள் கைது, மரணம், அரசின் முடிவை எதிர்த்து நடத்தப்படும் போராட்டம், எதிர்க்கட்சிகளின் பேரணி போன்றவற்றின் போது, பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுவது வாடிக்கையாக மாறியுள்ளது. இதை சரி செய்ய என்ன செய்யலாம் என்பது குறித்து அறிக்கை அளிக்கும்படி, சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ் இடம், மத்திய அரசு கோரியது. அதன்படி, அரசுக்கு, நீதிபதி தாமஸ் அறிக்கை அளித்துள்ளார்.
அதில், தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்களாவன:
*போராட்டத்தில் சேதமாகும் பொருட்கள் மற்றும் இடங்களின், அப்போதைய சந்தை மதிப்பை, போராட்டக்காரர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும்.
* அதிக தொகை கொண்ட அபராதம் விதிக்க வேண்டும்.
* பொதுச் சொத்துகளை சேதப்படுத்துபவர்களுக்கு, அதிகபட்சம், 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கலாம்.
*போராட்டத்தை துாண்டி விட்டவர் அல்லது சொத்துகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது. அவர்களும் கைது செய்யப்படுவது, அவர்களுக்கும் அபராதம் விதிப்பது.
இத்தகைய நடவடிக்கைகளால், பொதுச் சொத்துகளை காப்பாற்றலாம் என, பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரைகளை ஏற்கலாமா என்பது குறித்து பொதுமக்களும், அரசியல் தலைவர்களும், வரும், ஜூலை 20ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்க வேண்டும் என, மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
No comments:
Post a Comment