புதுக்கோட்டையில் பள்ளி ஆசிரியை கடந்த 7-ம் தேதி தற்கொலை செய்து கொண்டதற்கு அப்பள்ளித் தலைமையாசிரியரின் பாலியல் தொல்லையே காரணம் என்றும், அவர் மீது நடவடிக்கை கோரியும் கிராம மக்கள் திரண்டு சென்று செவ்வாய்க்கிழமை மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை, காமராஜபுரத்தை சேர்ந்தவர் புவனேஸ்வரி (25). ராயப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி ஆசிரியை. இவரது கணவர் வீரமணி புதுகையில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 7-ம் தேதி அதிகாலை வீட்டில் இருந்த புவனேஸ்வரி மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து கணேஷ்நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்தநிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் இறந்த ஆசிரியையின் உறவினர்கள், பொதுமக்களும் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இ.எஸ். உமாவிடம் அளித்த மனு:
ஆசிரியை பணியாற்றி வந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் கே. மதிவாணன் கொடுத்த பாலியல் தொல்லையால்தான் புவனேஸ்வரி தற்கொலை செய்து கொண்டார்.
இதற்குக் காரணமான மதிவாணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளியின் மற்ற ஆசிரியைகளிடமும், பெண் ஊழியர்களிடம் அவர் ஆபாசமாக பேசியதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்தும் அவர் தன்னைத் திருத்திக் கொள்ளவில்லை, மேலதிகாரியிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. சில நேரங்களில் பள்ளியில் தனியாக இருக்கும்போதும், விடுமுறை நாட்களில் பள்ளிக்கு வரவழைத்தும் பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால்தான் புவனேஸ்வரி தற்கொலை செய்து கொண்டார் எனப் புகார் தெரிவித்தனர்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து அருகேயுள்ள முதன்மை கல்வி அலுவலகத்துக்கும் சென்று மனு அளித்துவிட்டு தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி முழக்கமிட்டனர். தகவலறிந்த கணேஷ்நகர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் பேச்சுவார்த்தை நடத்தி, அளித்த உறுதியைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து புகாருக்கு ஆளான தலைமை ஆசிரியர் க. மதிவாணன் கூறியது: என்மீது கூறப்படும் புகாருக்கு எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை. குடும்பப் பிரச்னையால் அப்பெண் இறந்ததற்கு என்மீது வீண்பழி சுமத்தியுள்ளனர். இந்தப் புகாரை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என்றார்.
1 comment:
If it is true madhivaanan Meedhu nadavadikai veandum...
Post a Comment