தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் சார்பில் சென்னையில் புதிய கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ரோசய்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.
அவர் பேசும்போது, “கல்விதான் வெற்றியின் திறவுகோல். குழந்தைகளும், இளைஞர்களும் இந்தியாவின் எதிர்காலம். அவர்கள் சரியான பாதையில் வழி நடத்தப்படவேண்டும். ஆசிரியர்கள் சமூகத்தின் தூண்கள். நாட்டை வடிவமைப்பவர்கள். மனிதவள மேம்பாட்டில் கல்வி முக்கியத்துவம் பெறுகிறது. ஆசிரியர்கள் அறிவின் ஊற்று கண்களாக உள்ளனர். அவர்கள் மாற்றத்துக்கு வித்திடுபவர்கள்.
இந்த 21ம் நூற்றாண்டின் அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றத்தை கொண்டு வருபவர்களாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும். வகுப்புக்கு தயார் செய்யும் வகையில் அறிவை மேம்படுத்திக் கொள்வது நல்லாசிரியர்களுக்கு அழகு. கற்பித்தல் என்பது ஒரு கலை. ஆசிரியர்களுக்கு அர்ப்பணிப்பு உணர்வு வேண்டும். நமது முன்னாள் ஜனாதிபதியும், கல்வியாளருமான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஆசிரியர்கள் பற்றி கூறும்போது, “ஒரு ஆசிரியர் நன்னடத்தைக்கும், நல்லொழுக்கத்துக்கும் சிறந்த முன்னுதாரணமாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். நாடு வகுப்பறையில்தான் வடிவமைக்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்பப் புரட்சி யுகமான இந்தக் காலகட்டத்தில், ஆசிரியர்கள் தங்கள் அறிவுத்திறனை புதிய வழிகளில் வளர்த்துக் கொள்ளவேண்டும்” என்றார்.
No comments:
Post a Comment