அ.தி.மு.க.,வோ, தி.மு.க.,வோ எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கல்வித்துறை மீது தனி கவனம் செலுத்துவது வாடிக்கை. ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதிலும், புதிய பள்ளிகளை திறப்பதிலும், ஏற்கனவே இருக்கின்ற பள்ளிகளை தரம் உயர்த்துவதிலும் தீவிரம் காட்டுவர்.
கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன்வரை, பெரிய எண்ணிக்கையில் ஆசிரியர் நியமனம் நடக்கவில்லை. முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் 2004, 05, 06ம் ஆண்டுகளில் 45 ஆயிரம் ஆசிரியர்கள், தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனர். தொகுப்பூதிய அடிப்படையிலான பணி நியமனம் தானே என அலட்சியம் காட்டாமல், முறையாக, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டி தேர்வு நடத்தி அதில் அதிக மதிப்பெண்களை பெற்ற தகுதிவாய்ந்த இளைஞர்கள், இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களாக, பணி அமர்த்தப்பட்டனர்.
இவர்கள் அரசு அளிக்கும் பல்வேறு பயிற்சிகளை பெற்று, திறமையாக பணியாற்றி வருகின்றனர். இவர்களில் கணிசமான ஆசிரியர்கள், ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பவர்களாக, பணியாற்றி வருகின்றனர். இவர்களை 2006ல், பணி நிரந்தரம் செய்து அப்போதைய தி.மு.க., அரசு உத்தரவிட்டது. ஆனால், 2004 முதல் 2006 வரையிலான, தொகுப்பூதிய காலத்தை, ரெகுலர் பணி காலத்துடன் சேர்க்க வலியுறுத்தினர். ஆனால் இந்த கோரிக்கையை, கடைசிவரை, தி.மு.க., அரசு கண்டுகொள்ளவில்லை.
மீண்டும், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், தங்களை முதலில் தொகுப்பூதிய அடிப்படையில், பணி அமர்த்திய ஜெயலலிதாவே, தங்களின் கோரிக்கையை நிறைவேற்றுவார் என 45 ஆயிரம் ஆசிரியர்களும், எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதுபற்றி, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலர், பேட்ரிக் கூறுகையில், "எதிர்காலம் குறித்து, கவலையுடன் இருந்த கால கட்டத்தில், 45 ஆயிரம் இளைஞர்களுக்கு, ஆசிரியர் வேலை கொடுத்தனர். இதை இப்போதும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறோம். அந்த இரண்டு ஆண்டுக்கு உரிய முறையான சம்பளத்தை கேட்கவில்லை. அந்த காலத்தை, மொத்த பணி காலத்துடன் சேர்த்தால் போதும் என்றே எதிர்பார்க்கிறோம். இதை முதல்வர் செய்தால், 45 ஆயிரம் குடும்பங்களும் பயன்பெறும்" என்றார்.
1 comment:
10 years complete. Selection grade so. 45 thousands teachers benefits.
Post a Comment