ஸ்ரீபெரும்புதுாரில் பெயரளவில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில், பொறியியல் பட்டதாரி இளைஞர்கள் உட்பட ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
ஸ்ரீபெரும்புதுார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், நேற்று மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நேற்று முன்தினம் நடந்தது. பெரிய பதாகை முகாமில், ஸ்ரீபெரும்புதுார், இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம் சிப்காட் வளாகங்களில் அமைந்துள்ள, நுாற்றுக்கணக்கான நிறுவனங்களில் இருந்து, 29 நிறுவனங்களே கலந்து கொண்டன. அன்று காலை, 9:00 மணிக்கு துவங்கிய, வேலைவாய்ப்பு முகாம், மாலை, 4:00 மணி வரை நடந்தது. 10ம் வகுப்பு முதல் பொறியியல் பட்டதாரி வரை தகுதியுள்ள, 2,355 பணிகள் நிரப்பப்பட உள்ளன என, பள்ளி வளாகம் எதிரே, பெரிய பதாகை, அனைவரையும் வரவேற்றது.
மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும், 4,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள், ஆர்வமுடன் கலந்து கொண்டனர். பள்ளியில், போதிய இடவசதி இல்லாததால், சாலையில் நீண்ட நேரம் இளைஞர்கள் நின்றவாறு இருந்தனர். இதனால், பள்ளி நுழைவு வாயிலில், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மேலும் பொறியியல் பட்டதாரிகளை, தனியார் நிறுவனங்கள் தவிர்த்தன. இதனால், பொறியியல் கல்லுாரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள், விரக்தியுடன் திரும்பிச் சென்றனர். எதிர்கால கனவுகளுடனும், நம்பிக்கையுடனும் வந்த பட்டதாரி இளைஞர்களும், விரக்தியில் கலைந்து சென்றனர். நேற்று முன்தினம், நடந்த வேலைவாய்ப்பு முகாமில், ஒருவருக்கு கூட, வேலைக்கான நியமன உத்தரவு வழங்கப்படவில்லை.
பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை, இளைஞர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டு, "தொழிற்சாலை நிர்வாக இயக்குனர் மற்றும் பொது மேலாளர்கள் ஆலோசனைப்படி தகவல் வழங்கப்படும்" என்று கூறி திருப்பி அனுப்பினர்.
பரிசீலனை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்ட தொழிற்சாலை அதிகாரிகள் கூறுகையில், "தொழிற்சாலைகளில், உற்பத்தி குறைந்து உள்ளது. வேலை வழங்க முடியாத நிலையில், நிறுவனங்கள் உள்ளன. வேலைவாய்ப்பு முகாம் நடத்துவதாகவும், அதற்கு தவறாமல் வர வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் சார்பில், உத்தரவிட்டனர்.
அதனால், முகாமிற்கு வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மனுக்களை நிர்வாகிகளுடன் பரிசீலனை செய்த பின், பணிக்கான உத்தரவு வழங்கப்படும்" என்றனர்.
பொறியியல் கல்லுாரி மாணவர் ஒருவர் கூறுகையில், "பொறியியல் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் கலந்து கொள்ளலாம் என, அறிவிப்பு இருந்தது. இங்கு வந்தால், படித்து முடித்தவர்கள் மட்டுமே, முகாமில் பங்கு பெற முடியும் என்று கூறுகின்றனர். இதனால், ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு, வீண் அலைச்சல் தான்" என்றார்.
மாவட்ட மகளிர் சுயஉதவிக் குழு திட்ட அலுவலர் கிருஷ்ணம்மாள், தொழிற்சாலைப் பாதுகாப்பு மற்றும் சுகாதார ஆய்வாளர் இளங்கோ, வட்டார வளர்ச்சி அலுவலர் உமா ஆகியோர், வேலைவாய்ப்பு முகாமை பார்வையிட்டனர்.
No comments:
Post a Comment