சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் விடுப்பு எடுத்து, சென்னையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றதால், பல்கலைக்கழகம் வெறிச்சொடி காணப்பட்டது.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், நிதி நெருக்கடி காரணமாக, சம்பளம் குறைப்பு நடவடிக்கை ஊழியர்கள் மத்தியில், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்கலைக்கழக ஊழியர்கள், பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். இதையடுத்து ஆள் குறைப்பு மற்றும் ஊதியம் குறைப்பு, தற்போதைக்கு இல்லை என நிர்வாகம் அறிவித்தது.
ஆனாலும், இன்னும் சில மாதங்களில், மீண்டும் இதே பிரச்னை எழும் என, ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில், பல்கலைக்கழகத்தில் நடந்த ஊழல்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இணைவேந்தரை மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்கலை ஊழியர்கள், சென்னை சேப்பாக்கத்தில் நேற்று உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஒட்டுமொத்த விடுமுறை விண்ணப்பம் கொடுத்தனர். ஆனாலும் தேர்வுப் பணி, மருத்துவப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் விடுமுறை விண்ணப்பம் கொடுத்து விட்டு உண்ணாவிரதத்தில் பங்கேற்காமல் பணியாற்றினர். அலுவலர்கள் இல்லாததால் அனைத்து துறைகளும் இழுத்து மூடப்பட்டு பல்கலை வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.
No comments:
Post a Comment