கல்விக் கட்டணக் குழுவிடம் முழு விவரங்களை சமர்ப்பிக்கத் தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் தனியார் பள்ளிகள் வரம்பு மீறி கல்விக் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனால் ஏழை, எளிய மாணவ, மாணவியர், பெற்றோர் கடும் பாதிப்பு அடைந்து வருகின்றனர். கல்விக் கட்டணத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில் கல்விக் கட்டண நிர்ணயக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு கட்டணத்தை நிர்ணயிப்பதற்காக பள்ளிகளிடம் கட்டமைப்பு வசதி, ஆசிரியர்கள் எண்ணிக்கை, மாணவர்களுக்கான வசதிகள் தொடர்பாக முழு விவரங்களை தர உத்தரவிட்டுள்ளது.
சில பள்ளிகள் மட்டுமே விவரங்களை தந்துள்ளன.
இந்நிலையில் தனியார் பளளி கல்விக் கட்டணம் நிர்ணயம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் ஜீவானந்தம் அரசு பள்ளியில் நடைபெற்றது. முதல்வர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.
கல்வி அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், செயலர் நரேந்திரகுமார், இயக்குநர் குமார், துணை இயக்குநர் கிருஷ்ணராஜ் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் நாராயணசாமி கூறியதாவது:
புதுவையில் மொத்தம் 313 தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில்
198 பள்ளிகள் மட்டுமே விவரங்களை தந்துள்ளன. மீதமுள்ள பள்ளிகள் தேவையான விவரங்களை தரவில்லை.
இதனால் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க முடியாத நிலை உளளது. பெற்றோருக்கும் சுமையில்லாத வகையிலும், பள்ளி நிர்வாகங்களுக்கும் பாதிப்பில்லாத வகையிலும் கட்டணத்தை வசூலிக்க வேண்டும். தனியார் பள்ளி நிர்வாகிகள் விரைவில் விவரங்களை தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்ட்டுள்ளது எனறார்.
No comments:
Post a Comment