நெல்லையில் டிரான்ஸ்பருக்கு லஞ்சம் கேட்டதாக, ஆசிரியை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
திருநெல்வேலி, பெருமாள்புரம், என்.எச்.காலனியை சேர்ந்தவர் ஜான். இவர் கேரளாவில் பணிபுரிகிறார். இவரது மனைவி ஹெப்சி 45. மேலப்பாளையத்தை அடுத்துள்ள கருங்குளம், டி.டி.டி.ஏ., பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றிவந்தார். இந்த பள்ளி தென்னிந்திய திருச்சபையின் மூலம் நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களின் பணியிடங்களில் சி.எஸ்.ஐ.,நிர்வாகத்தினர் மாற்றம் செய்வார்கள். கருங்குளத்தில் இருந்து ஆசிரியை ஹெப்சியை சேரன்மகாதேவி அருகே உள்ள கரிசல் கிராமத்திற்கு மாற்றம் செய்துள்ளனர். இதனால் ஹெப்சி மனமுடைந்தார்.
நேற்று வீட்டில் இருந்த போது விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், 'சி.எஸ்.ஐ., பள்ளி தாளாளர் எமி நேபிள், பள்ளி தலைமையாசிரியர் ஜான் செல்லையா, மற்றும் நிர்வாகிகள் பால்துரை, ஜேக்கப் ஆகியோர் தம்மிடம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், தாம் ஆண்டு தோறும் இவ்வாறு டிரான்ஸ்பர் என வரும்போதெல்லாம் பணம் கொடுத்துள்ளதாகவும் இதுவரையிலும் 12 முறை பணம் கொடுத்துள்ளதாகவும் பணத்தை பெற்றுக்கொண்டும் தம்மை டிரான்ஸ்பர் செய்துவிடுவதாக மிரட்டுவதாகவும்,' குறிப்பிட்டுள்ளார். பெருமாள்புரம் போலீசார், நான்குபேர் மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
போலீஸ் துணைகமிஷனர் சுரேஷ்குமார் கூறுகையில், 'வழக்கமாக இதுபோன்ற வழக்குகளில் முதலில் தற்கொலைக்கான 174 பிரிவில் வழக்குபதிவு செய்து, தூண்டுதல் குறித்து தெரியவந்தால் வழக்கை 306 பிரிவிற்கு மாற்றுவோம். ஆனால் இந்த வழக்கில் தற்கொலை நடந்த இடத்திலேயே அவரது கடிதம் கிடைத்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நான்குபேர் மீதும் நேரடியாக 306 வழக்குபதிவு செய்துள்ளோம்,' என்றார். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சி.எஸ்.ஐ., நிறுவனத்தின் கீழ் நூற்றுக்கணக்கான பள்ளிகள் இயங்குகின்றன. டிரான்ஸ்பருக்கு பணம் கொடுத்தும் ஒரு ஆசிரியை தற்கொலை செய்து கொண்டதன் மூலம் சி.எஸ்.ஐ., வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
No comments:
Post a Comment