ஓசூர் நகராட்சி துவக்கப்பள்ளியில், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் தலைமை ஆசிரியரை கண்டித்தும், அவரை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யக்கோரியும், மாணவ, மாணவியரின் பெற்றோர்கள், பள்ளியை முற்றுகையிட்டனர்.
ஓசூர் முத்துராயன் ஜீபி பகுதியில் உள்ள நகராட்சி துவக்கப்பள்ளியில், தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சாரதம்மாள். இவர் மீது பல அடுக்கடுக்கான புகார்கள் கூறப்பட்டதால், சி.இ.ஓ., ராமசாமி, அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், நேற்று காலை, பள்ளி முன் திரண்ட மாணவ, மாணவியரின் பெற்றோர்கள், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் தலைமை ஆசிரியர் சாரதம்மாளை, மீண்டும் இதே பள்ளியில் பணிக்கு அமர்த்தினால், எங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் எனக்கூறி, பள்ளியை முற்றுகையிட்டனர்.
இது குறித்து, மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் கூறியதாவது:
இப்பள்ளியில், 250 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் அனைத்தையும், பள்ளி தலைமை ஆசிரியராக இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட சாரதம்மாள் விற்பனை செய்து விட்டார்.
எங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்க்க, ஒரிஜினல் பிறப்பு சான்றிதழை பெற்றுக் கொண்டார்.ஆனால், தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், பிறப்பு சான்றிதழை அவரது வீட்டிற்கு எடுத்துச் சென்று விட்டார்.
பள்ளிக்கு புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்திற்கு, ஒவ்வொரு பெற்றோரிடம் இருந்தும், 1,000 ரூபாய் வீதம் வாங்கிக் கொண்டார். பள்ளியில் உள்ள கழிப்பறையை பயன்படுத்த, மாணவ, மாணவியரிடம் பணம் கேட்கிறார்.
இதேபோல், பல்வேறு முறைகேடுகளை செய்து, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள தலைமை ஆசிரியரை, மீண்டும் இதே பள்ளியில் நியமிக்கக் கூடாது. அவ்வாறு நியமனம் செய்தால், எங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம்.
No comments:
Post a Comment