அரசுப்பள்ளிகளில் படிக்கும் திறமையான மாணவர்களைகண்டறிந்து அவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதற்காக தேசிய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் ஆண்டு தோறும் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேசிய திறனறிவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
இத்தேர்வை அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் மட்டும் எழுதலாம். இந்த தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு முடிக்கும் வரை மாதந்தோறும் ரூ.500 உதவித் தொகை மத்திய அரசால் வழங்கப்படும். இத்தேர்வு மூலமாக தமிழ்நாட்டில் 6,695 பேருக்குஉதவித் தொகை கிடைக்கும்.
இக்கல்வி ஆண்டுக்கான இத்தேர்வு வரும் ஜனவரி 24 ம் தேதி பல்வேறு மையங்களில் நடைபெற உள்ளது.
இத் தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகிலுள்ள மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 19 மற்றும் 20ஆம் தேதிகளில் நடைபெற்றது.
பயிற்சி முகாமை கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் புல்லாணி தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.தலைமையாசிரியை பத்திரம்மாள் வரவேற்றார்.முகாமில் மூலத்துறை ஆசிரியர்கள் திருமுருகன்,ரவிக்குமார் , லிங்காபுரம் பள்ளி ஆசிரியர் சிவக்குமார் மற்றும் புதுக்காடு பள்ளியின் ஆசிரியர் சுனில் குமார் ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சியளித்தனர்.பயிற்சி முகாமில் மூலத்துறை,லிங்காபுரம்,புதுக்காடு, மற்றும் பள்ளேபாளையம் பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். மாணவர்கள் கணக்கு,அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் இருந்து படிப்பறிவுத்திறன் வினாக்களிலும் பொதுவான மனத்திறன் வினாக்களிலும் பயிற்சியளிக்கப்பட்டனர்.
முகாமின் இறுதியில் பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு மாதிரித் தேர்வு நடத்தப்பட்டு, ஒவ்வொரு பள்ளியிலும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பரிசுகள் அளிக்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டனர். பரிசளிப்பு விழாவில் காரமடை பள்ளியின் தலைமையாசிரியை மாலதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்
No comments:
Post a Comment