டெல்லியில் மருத்துவ மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் தொடர்ந்து தலைநகரில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுத்து நிறுத்த போலீசார் செல்போனில் புதிய வசதியை தொடங்கி உள்ளனர்.
இதற்கு ‘ம்மத்’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. ‘ம்மத்’ என்றால் இந்தியில் தைரியம், துணிச்சல் என்று அர்த்தம். நவீன (ஆன்டிராய்டு) செல்போன்களில் இலவசமாக பதிவிறக்கம் (டவுன்லோடு) செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த புதிய வசதியை (அப்ளிகேஷன்) பெண்கள் தங்களை பதிவு செய்து கொண்டதும் எஸ்.எம்.எஸ் வழியாக இணைப்பு அனுப்பப்படும்.
இதன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பொதுஇடங்களில் பிரச்சினையை எதிர்கொள்ளும் பெண்கள், இதில் அளிக்கப்பட்டுள்ள பவர் பட்டன் வழியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறையுடன் உடனடியாக தொடர்பு கொள்ளலாம். மேலும் ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம் உடனடியாக 30 விநாடிகள் வீடியோ பதிவு செய்யலாம்.
போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தவுடன், இதுகுறித்து உடனே பாதிக்கப்பட்டுள்ளவரின் 5 நண்பர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும். மேலும், ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருக்கும் போலீசாருக்கும், அந்த பகுதி போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்படும்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண் இருக்கும் இடம், நேரம் ஆகியவை போலீஸ் கட்டுப்பாட்டு அறை மூலமாக கண்டறியப்பட்டு உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படும். இதன் மூலமாக ஆபத்தில் உள்ளவர் உடனடியாக காப்பாற்றப்படுவார்.
டெல்லியில் நேற்று நடந்த விழாவில், பெண்களின் பாதுகாப்புக்கான ‘ம்மத்’ புதிய வசதியை மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர், ‘இது முழுக்க முழுக்க பெண்களின் பாதுகாப்பு கருதி உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த வசதி ஐ போன்களிலும் விஸ்தரிக்கப்படும். அதனால் மேலும் பலர் இதனை பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். மத்திய போலீஸ் படையில் பெண்களின் எண்ணிக்கை தற்போது 1½ சதவீதமாக உள்ளது. இது வரும் 3 ஆண்டுகளில் 5 சதவீதமாக உயர்த்தப்படும். போலீஸ் படையில் பெண்களை தேர்ந்தெடுக்க 33 சதவீத அடிப்படையை கடைபிடிக்குமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம்’ என்று தெரிவித்தார்.
கூட்டத்தில் பேசிய டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ்.பஸ்ஸி, ‘தனியாகச் செல்லும் பெண்களின் பாதுகாப்புக்காக இந்த புதிய செல்போன் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளோம். ஆபத்து பட்டனை அழுத்தினால் ஆபத்தில் சிக்கியுள்ள பெண் இருக்கும் இடத்தை போலீசார் உடனடியாக கண்டறியும் வகையில் நவீன வசதி அமைக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.
No comments:
Post a Comment