Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, June 11, 2014

    இலவச கல்வி 'உயிர்' பெற...சமச்சீர் கல்வி 'சீர்' பெற கல்வித்துறையை கையில் எடுப்பாரா முதல்வர்? தினமலர்

    'அய்யோ... முப்பருவ தேர்வுமுறை கிடையாதா?' என, 10ம் வகுப்பு சென்றிருக்கும் மாணவர்கள் பதறுகின்றனர். '25 சதவீத இட ஒதுக்கீட்டுல, என் பிள்ளைக்கு சீட் கிடைச்சிடுமா?' என, இலவச கட்டாய கல்விச்சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருக்கும் ஏழை பெற்றோர் கலங்குகின்றனர். இப்படி, மாணவர்களை பதற வைத்து, ஏழைப் பெற்றோரை கலங்க வைத்து, பள்ளிகள் தொடங்கி இருக்கும் நிலையில், கல்வியில் உள்ள குறைபாடுகளையும், புதிய கல்வியாண்டு எதிர்நோக்கும் சீர்திருத்தங்களையும் பட்டியலிடுகின்றனர் கல்வியாளர்கள்.

    சரிவு நிச்சயம்!
    'முன்னாடி இருந்த சூழல் இப்போ இல்லை. மாணவர்கள் யாரும் ஆசிரியர்களை மதிக்கிறதில்லை. 'எட்டாவது வகுப்பு வரைக்கும் யாரையும் பெயில் ஆக்க மாட்டாங்க'ன்னு தெரிஞ்சதுக்கப்புறம், அவன் எப்படி எங்களை மதிப்பான்? ஆசிரியர்கள் மேல பயம் இல்லைன்னா, மாணவர்கள்கிட்டே ஒழுக்கம் எப்படி வரும்? இதோ... இந்த வருஷம் 10ம் வகுப்புக்கு போற மாணவர்களுக்கு, மிகப் பெரிய சோதனை காத்துட்டு இருக்கு. எந்த வகுப்புலேயும் நிறுத்தி வைக்காம, கட்டாய கல்விச் சட்டம் 10வது வரைக்கும் அவங்களை கூட்டிட்டு வந்திடுச்சு. சமச்சீர் முப்பருவ தேர்வு, அவங்களை சோம்பேறியாக்கி வைச்சிருக்கு. இந்த சூழல்ல, முழுப் பாடத்தையும் படிச்சு, பொதுத்தேர்வு எழுதணும். நிச்சயமா 2014 - 15ம் கல்வி ஆண்டுல, 10ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் சரியத்தான் போகுது!- தனித்தனியாக பேசினாலும், ஒருமித்த உணர்வை வெளிப்படுத்தினர் தனியார் பள்ளி முதல்வர்கள்.

    இவர்களின் ஆதங்கத்தை வைத்து பார்த்ததில், இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டமும், தமிழக அரசின் சமச்சீர் கல்வித் திட்டமும், கடமையாக நிறைவேற்றப்பட்டதா இல்லை, கடமைக்கு நிறைவேற்றப்பட்டதா என்கிற கேள்வி எழுந்தது. இந்த கேள்வியை, கடும் வேதனையோடு எதிர்கொண்டனர் கல்வியாளர்கள்.

    சமச்சீர் கல்வியின் நிலை
    ''சமச்சீர் கல்வி நல்ல திட்டம் தான். ஆனா, அதை முறைப்படி செயல்படுத்தாததுனால, தள்ளாடிகிட்டு இருக்கு,'' என, எடுத்த எடுப்பிலேயே, தன் வருத்தத்தை பதிவு செய்தார் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கூர்நோக்கத்தின் அமைப்பாளர் சண்முகவேலாயுதம். 

    இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:இங்கே பாடத்திட்டம் மட்டும் தான் சமமா இருக்கு. மத்தபடி, பாடநூல் தேர்வு முறை கூட வெவ்வேறு விதமாத்தான் இருக்கு. இது இல்லை சமச்சீர் கல்வி. 'சமமான தரத்தில் பாடத்திட்டம், பள்ளிக்கூட வசதிகள், ஆசிரியர் எண்ணிக்கை, ஆசிரியர்களின் திறமை, பாடநூல் தேர்வு முறைகள், பள்ளி நிர்வாகம் உள்ளிட்ட பள்ளிக் கல்வியின் அங்கங்கள் யாவும், சமமான தரத்தில் இருப்பது தான் சமச்சீர் கல்வி'ன்னு, சமச்சீர் கல்வி சம்பந்தமா ஆய்வு நடத்துன, முத்துக்குமரன் குழுவோட அறிக்கை சொல்லுது. ஆனா, நிலைமை எப்படி இருக்கு? ஒரு பக்கம், தனியார் பள்ளிகள் வளர்ந்துட்டே இருக்கு. மறுபக்கம், 'இணைக்கிறோம்'ன்னு சொல்லி, அரசுப் பள்ளிகளோட எண்ணிக்கையை குறைச்சுட்டே இருக்காங்க. இருக்குற அரசுப் பள்ளிகளும், முழுமையான வசதிகள் இல்லாம இருக்கு!முக்கியமா, 'சமச்சீர் கல்வி அமலுக்கு வந்த மூன்றாண்டுகளுக்குள், பயிற்சி பெறாத ஆசிரியர்கள் அனைவரும், தகுதி பெற வேண்டும்'னு, முத்துக்குமரன் குழு சொன்ன பரிந்துரையும், 'ஒவ்வொரு மாணவனோட திறனையும் மதிப்பிட்டு, அவனுக்குன்னே தனியா ஒரு குறிப்பேடு பராமரிக்கணும்'னு சொன்ன பரிந்துரையும், முழுமையா நிறைவேற்றப்படலை! என்னைப் பொறுத்தவரைக்கும், முத்துக்குமரன் குழு பரிந்துரை பண்ணுன சமச்சீர் கல்வி இது இல்லை! இவ்வாறு அவர் கூறினார்.

    தகுதியுள்ள மாணவர்களா?
    சமச்சீர் கல்வி, இன்னும் முழுமையான செயல்பாட்டுக்கு வராத நிலையில், இக்கல்வியால், தகுதியுள்ள மாணவர்களை எப்படி உருவாக்க முடியும்? இந்த கேள்வியோடு, சில கல்வியாளர்களை அணுகினோம். 'சமச்சீர் கல்வி நல்ல திட்டம் தான். ஆனால், 'கட்டாய கல்வி சட்டத்தின் படி (ஆர்.டி.இ.,) மாணவர்களை கரையேற்றுகிறோம்' எனச் சொல்லி, திறனற்ற மாணவர்களை, ஒன்பதாம் வகுப்பு வரையிலும் ஆசிரியர்கள் கொண்டு வந்து விடுகின்றனர். அதே சட்டம், 'மாணவனின் அறிவை மேம்படுத்தி கரையேற்ற வேண்டும்' எனச் சொல்கிறது. ஆனால், அதைப்பற்றி ஆசிரியர்கள் யோசிப்பதில்லை. ஒவ்வொரு வருடமும், எல்லா வகுப்புகளிலும் தேர்ச்சி விகிதம் அதிகரித்தபடி இருக்கிறது என்றாலும், தேர்ச்சி பெற்றவர்கள், தகுதியுள்ள மாணவர்களாக இருப்பரா என்பது சந்தேகம்தான்!' என்கின்றனர் சமச்சீர் கல்வி திட்டத்தை ஆதரிக்கும் கல்வியாளர்கள்.

    அழிவுக்காகவா ஆர்.டி.இ.,? 
    அப்படியென்றால், 'அழிவை தருவதற்காகத் தான் ஆர்.டி.இ., சட்டமா?' என்ற கேள்வியோடு, பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவை அணுகினோம். 

    இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்த கட்டாய கல்வி உரிமைச்சட்டம் ஆர்.டி.இ., மூலமா, தன்னோட கடமைகள்ல இருந்து, அரசாங்கம் ரொம்பவே சாமர்த்தியமா தப்பிச்சிருக்கு. 'மாணவர்களோட வீட்டுல இருந்து 1 கி.மீ., (1 - 5 வகுப்புகளுக்கு), 3 கி.மீ., ( 6 - 8 வகுப்புகளுக்கு)தூரத்துக்குள்ளே இருக்கற அருகாமை பள்ளிகள்ல, கல்வி பயிலலாம்'னு, சட்டம் சொல்லுதே தவிர, 'அந்த பள்ளி, அரசு பள்ளியா இருக்கணும்'னு சொல்லலை. அதேமாதிரி, 'பள்ளிகள் இயங்குற நேரத்துல, 6 - 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கட்டாயம் படித்தாக வேண்டும்'ன்னு சொல்லுது. அப்படீன்னா, மற்ற நேரங்கள்ல அவங்க வேலை பார்க்கலாமா? இதெல்லாம் விட, 'முடிந்தவரையில் தாய்மொழியில் கல்வி பயிற்றுவிக்கலாம்'னு, சொல்றதுதான் உச்சகட்ட கொடுமை!ஒண்ணு தெரியுமா? ஜூன் 6ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட, 'தேசிய கல்வி பாடத்திட்டம் 2005' மாணவர்களோட புத்திசாலித்தனத்திற்கு உத்தரவாதம் கொடுக்குற வகையில, 'பயிற்றுமொழியா தாய்மொழி தான் இருக்கணும்'னு சொல்லுது! ஆனா, 'இலவச கட்டாய கல்விச்சட்டம் 2009' 'இயன்றவரைக்கும் தாய்மொழி'ன்னு சொல்லுது. ஏன்னா, இது நடைமுறைக்கு வந்த நாள், ஏப்ரல் 01.இவ்வாறு அவர் கூறினார்.

    இடஒதுக்கீடு மர்மம்? 
    இலவச கட்டாய கல்விச் சட்டத்திலிருந்து, அரசு உதவி பெறாத சிறுபான்மை பள்ளிகளுக்கு, ஏற்கனவே விலக்கு அளிக்கப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில், அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளுக்கும், விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் கேட்ட போது, 'சிறுபான்மையினர் பள்ளிகளில், சிறுபான்மை இன மக்கள் தான் அதிக அளவில் படிக்கிறாங்கன்னு, அரசால உறுதியா சொல்ல முடியுமா?' என, கேள்வி எழுப்பினார்.அவரிடம், '25 சதவீத இட ஒதுக்கீடு, நியாயமாக நடக்கிறதா?' என்று கேட்டதற்கு, 'அதுக்கு எந்த உத்தரவாதமும் கொடுக்க முடியாது. நலிந்த, வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கப்படற, 25 சதவீதத்துல, யாருக்கு எத்தனை சதவீதம்ங்கற, உள் ஒதுக்கீடு இல்லை. இதை அரசாங்கம் இன்னும் தெளிவுபடுத்தலை. 'வழக்கமான முறையில சேர்த்த குழந்தைகளைத் தான், இட ஒதுக்கீட்டுல சேர்த்ததா, தனியார் பள்ளிகள் கணக்கு காமிக்கிறாங்க'ன்னு, கடந்த வருடம் குற்றச்சாட்டு வந்தப்போ, அரசு மறுப்பு தெரிவிக்கலை. என்னைப்பொறுத்தவரைக்கும், கட்டண கொள்ளை அடிக்கும் தனியார் பள்ளிகளுக்கு, மக்கள் பணத்தை தாரை வார்க்கிறதுக்கு பதிலா, அரசு பள்ளிகளோட எண்ணிக்கையையும், தரத்தையும் உயர்த்த அரசு முயற்சி பண்ணலாம். ஏன்னா, அருகாமை பள்ளி அமைப்புல, பொதுப்பள்ளி மூலமா, கல்வி உரிமை வழங்குனா மட்டும் தான், அனைவருக்கும் கல்வி என்பது சாத்தியம்' என்றார்.

    ஆசிரியர்களின் மனநிலை?
    கல்வி என்பது தொழிலாக போய் விட்ட நிலையில், பாடம் என்பது, மாணவர்களுக்கு சுமையாக மாறி விட்ட நிலையில், தவம் கேட்காமல், வரம் தரும் கடவுள்களான ஆசிரியர்களின் மனநிலை?இந்த கேள்விக்கு, அழகாய் கை உயர்த்துகிறது ராமநாதபுரம் மாவட்டம்.கடந்த மார்ச் மாதம், அரசு பள்ளியில் பயிலும் 3 - 8ம் வகுப்பு மாணவர்களுக்கு, 'திறனறி' தேர்வை மாவட்ட ஆட்சியர் நடத்தியிருக்கிறார். இது, மாணவர்களை விட, ஆசிரியர்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம், முப்பருவ முறைக்கு பழகிவிட்ட ஆசிரியர்களை, மூன்று பருவ பாடத்திற்கும் சேர்த்து மாணவர்களை தயார் படுத்த சொன்னது தான்! 'கடுமையான வேலைப்பளு' என்று புலம்பியபடியே, 'ஆட்சியருக்காக' மாணவர்களை அவர்கள் தயார் செய்ய, மாணவர்களும், 'ஆட்சியருக்காக' தேர்வு எழுதி இருக்கின்றனர். ஒன்பதாம் வகுப்பு வரை, முப்பருவ முறையில் தேர்வெழுதி பழகிவிட்டு, 10ம் வகுப்புக்கு, மூன்று பருவங்களையும் சேர்த்து எழுத வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் மாணவர்களின் மனநிலையையும், அவர்களை தயார் செய்ய வேண்டிய ஆசிரியர்களின் மனநிலையையும் அழகாய் பிரதிபலிக்கிறது இராமநாதபுரம் மாவட்டம்.
    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்!

    எத்தனை குழப்பங்கள்:
    சமச்சீர் கல்வி அறிக்கை, 'மாநில மொழி அறிவு பெறுதலை, பள்ளிக் கல்வியின் மிக முக்கிய அடிப்படை அம்சம்' என, சொல்கிறது. ஆனால், நம் அரசோ, ஆங்கில வழி கல்வியை, அரசுப்பள்ளிகள் வரை கொண்டு வந்து விட்டது.இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டம், 06 - 14 வயதுள்ள குழந்தைகளின் கல்விக்கு மட்டுமே உத்தரவாதம் அளிக்கிறது. ஆனால், '??வயது வரை உள்ள அனைவரும் குழந்தைகள் தான்' என்று, 'குழந்தைகளுக்கான தேசிய கொள்கை 2013' தன் முகவுரையில் குறிப்பிடுகிறது. அதேபோல், 1 - 8ம் வகுப்பு வரையிலான தொடக்க கல்விக்குத்தான் அரசு உத்தரவாதம் அளிக்கிறதே தவிர, அதற்குப் பிறகு மாணவர்களின் நிலை பற்றி சொல்லவில்லை. மேலும், 14 வயதில் இருக்கும் மாணவர்கள், பெரும்பாலும் ஒன்பதாம் வகுப்பில் இருப்பர். அப்படியென்றால், ஒன்பதாம் வகுப்பும் கட்டாயக் கல்விக்குள் வருமா என்ற கேள்வி எழுகிறது. அதேபோல், 03 - 06 வயது வரைக்குமான, முன்பருவ கல்வி தரும் பொறுப்பு பற்றி, அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை.இவை எல்லாவற்றிற்கும் மேலாக, கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் உறுப்பு 23(2)ன்படி, 2015 ஏப்ரல் மாதத்திற்குள், ஆசிரியர்கள் அனைவரும், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.ஆனால், நடந்து முடிந்த தேர்வு வரை, அத்தகைய இலக்கு எட்டப்பட வில்லை. அதற்கான முயற்சியும் அரசிடம் இருப்பதா தெரியவில்லை.

    நியாயமான கோபம்
    கடந்த மே 28, 2013ல், கல்வி உரிமைச்சட்டம் குறித்து, கோவா முதல்வர் மனோகர் பரிக்கர் குறிப்பிடுகையில், 'மத்திய அமைச்சர் கபில்சிபலின் முட்டாள்தனமான கொள்கை அது' என, கடுமையாக விமர்சித்திருந்தார். 'கட்டாய கல்வி என்பது நல்ல விஷயம் தான். ஆனால், அதை நடைமுறைப்படுத்தும் கேலிக்குரிய விதத்தால், அதிக அளவிலான தகுதியற்ற மாணவர்கள், ஒன்பதாம் வகுப்புக்கு, எந்த தடையும் இல்லாமல் வந்து விடுகின்றனர். இதற்கு ஒரு தீர்வு வேண்டும். முறையான கல்வி அளிப்பதற்கு முன்னுரிமை வேண்டும்' என்றார். 'மாநில கல்வித்துறையை தன் வசம் வைத்திருக்கும், கோவா முதல்வரின் கோபம் நியாயம்' எனச் சொல்லும் நம் கல்வியாளர்கள், தமிழக முதல்வரிடமிருந்தும், இப்படி ஒரு கோபத்தை எதிர்பார்க்கின்றனர்.

    செய்வாரா முதல்வர்? 
    'உண்மையான கல்வி என்பது, மூளைக்கும், மனதிற்கும் பயிற்சி அளிப்பதாக இருக்க வேண்டும். அதற்கு தூய்மையான, முறையான கல்வி அவசியம்!' - இது, 2004-ல், கும்பகோணம் தீ விபத்தில், 94 இளம் தளிர்கள், தீ நாக்குகளுக்கு இரையான பின்பு, அவர்களின் கல்லறையில் வைத்து நீதிபதி சம்பத்வடித்த பரிந்துரை. இதை நிறைவேற்ற வேண்டிய சூழல், தற்போது ஏற்பட்டிருக்கிறது.'கட்டாய தேர்ச்சி என்பது நல்லது தான். ஆனால், மாணவர்களின் அறிவுத்திறனை உயர்த்தி, அது நிறைவேற்றப்பட வேண்டும். மாணவர்கள் கல்வியை விரும்ப வேண்டும். அத்தகைய சூழலை, கற்பிப்பவர்களும், கல்விச்சாலையும் உருவாக்க வேண்டும். அதேபோல், இளம் பிஞ்சுகளின் மனதை அலைபாய விடாமல் தடுக்கும் கடமை கல்விக்கு இருக்கிறது. முப்பருவ தேர்வு முறையால், மாணவர்களின் மூளை அதிக ஓய்வு எடுக்கிறது. அந்த ஓய்வு, மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு நல்லதல்ல' என்பதை, உணர வேண்டிய கட்டாயம் உருவாகி இருக்கிறது.'காவல்துறையால் பாதுகாப்பு கொடுக்க முடியும். கல்வித்துறையை கையில் எடுத்தால் மட்டுமே, மக்களுக்கு வளர்ச்சி கொடுக்க முடியும்' என்கின்றனர் கல்வியாளர்கள்.ஆக, 'அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி கிடைக்க, இந்திய நாட்டிலேயே மிகச்சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை தமிழகம் ஏற்படுத்தி தரும்' என்ற, 'தமிழக தொலைநோக்கு 2023' கனவு நிறைவேற, கல்வித்துறை, முதல்வர் வசம் வர வேண்டும்.எதுவும் சுலபமில்லை. ஆனால், முதல்வர் நினைத்தால் எல்லாமே சாத்தியம் தான்!

    முப்பருவ முறை அவசியமா?
    'கடந்த 2012ல் அறிமுகப்படுத்தப்பட்ட முப்பருவ முறை, மாணவர்களின் படிக்கும் ஆர்வத்தை கணிசமாக குறைத்து விட்டது. திறன்களை மதிப்பிடும், வளரறி மதிப்பீடு மூலமாக, 40 மதிப்பெண்கள் சுலபமாக கிடைத்து விடுவதால், பாடங்களை கிரகித்து, தேர்வெழுதி வாங்க வேண்டிய 60 மதிப்பெண்களுக்கு, மாணவர்கள் அதிக சிரத்தை எடுப்பதில்லை. இது, அவர்களின் எதிர்காலத்தை நிச்சயம் பாதிக்கும்' என்கின்றனர், மாணவர்களின் நலனில் அக்கறை கொண்ட ஆசிரியர்கள்.

    மோடி முந்த வைப்பாரா? 
    'கடந்த 2013, ஜூலை 15ம் தேதி, புனேவில் உள்ள பெர்குஸன் கல்லூரியில் உரையாற்றிய மோடி, சீனாவின் கல்வித்தரம் உயர்ந்திருப்பதற்கு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (எஈக) 20 சதவீதத்தை கல்விக்கு ஒதுக்குவதே காரணம் என்றும், இந்திய அரசு, தான் சொன்னபடி 7 சதவீதத்திற்கு பதிலாக, வெறும் 4 சதவீதமே ஒதுக்குகிறது என்றும் வருந்தினார். தற்போது இந்திய நாட்டின் லகான், மோடியின் கைகளுக்கு கிடைத்திருக்கும் நிலையில், சீனாவை இந்தியா முந்துமா?

    பின்பற்றுகிறோமா? 
    *வகுப்பறைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கதவுகள் இருப்பது அவசியம்.
    *மாடியின் எந்த பக்கமிருந்தும், படிக்கட்டுகளின் தூரம், 22.60 மீட்டர்களுக்கு உட்பட்டே இருக்க வேண்டும்.
    *அனைத்து ஆசிரியர்களும், 'முதல் உதவி' பயிற்சியில் தன்னிறைவு பெற்றிருக்க வேண்டும்.
    *வகுப்பறையில் இருந்து கடைசியாக வெளியேறும் நபர் ஆசிரியராக இருக்க வேண்டும்.
    *கல்வித்துறையின் ஆய்வுகள் தீவிரமாகவும், கடுமையாகவும் இருக்க வேண்டும்.
    - நீதிபதி சம்பத் கமிஷனின் மிக முக்கிய பரிந்துரைகள்

    No comments: