மல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், வேதியியல் ஆய்வக கட்டடத்தில், மாதிரி பள்ளி செயல்படுவதால், செய்முறை பயிற்சி நடப்பதில்லை என, புகார் எழுந்துள்ளது. வகுப்பறைகளில், முப்பருவ பாடப் புத்தகங்கள் உள்ளதால் வராண்டா மற்றும் மாடிப்படி அடியில் வகுப்பு நடப்பதால் மாணவியர் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
சேலம் மாவட்டம், மல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், 1,300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். 2009ல் நபார்டு திட்டத்தில், 93 லட்சம் ரூபாய் மதிப்பில் 22 வகுப்பறை கட்டப்பட்டு வகுப்புகள் நடந்து வந்தன. சேலம் கல்வி மாவட்டத்துக்கு தேவையான முப்பருவ பாடப் புத்தகம், நபார்டு கட்டடத்தில் உள்ள பத்து வகுப்பறைகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
இதனால், வகுப்பறை பற்றாக்குறை ஏற்பட்டு மாடிப்படி அடி, வராண்டா மற்றும் மரத்தடியில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மேலும், இப்பள்ளியின், வேதியியல் ஆய்வகத்தில் செயல்படும் மாதிரி பள்ளியில், ஆறு முதல் பிளஸ் 1 வரை 163 மாணவ, மாணவியர் உள்ளனர். ஆய்வகத்தில் திரைச்சீலை கட்டி, அறை போல் தடுத்து, வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
வேதியியல் ஆய்வகத்தில், மாதிரி பள்ளி செயல்படுவதால், பொதுதேர்வுக்கு தயாராகும், பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, செய்முறை பயிற்சி வகுப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக, புகார் எழுந்துள்ளது. அது மட்டுமின்றி, தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளதால், நிர்வாக பணி மேற்கொள்வதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் (பொறுப்பு) ஒருவர் கூறியதாவது: இங்கு, பாடப் புத்தகம் அடுக்கி வைத்திருப்பது, உயர் அதிகாரிகளுக்கு தெரியும். விடுமுறை நாளில் வெளியாட்கள், பள்ளி வளாகத்திற்குள் புகுந்து, பழைய கட்டடத்தில் உள்ள ஓடுகளை, கல் வீசி உடைக்கின்றனர். அதனால், வகுப்பறை ஓடுகள், சேதம் அடைந்துள்ளன. இது பற்றி, போலீசில் புகார் செய்துள்ளோம்.
சேலம் எம்.பி., நிதியில் 12 வகுப்பறை கட்ட ஏற்பாடு நடந்து வருகிறது. விடுமுறை நாளில் ஆய்வகத்தில் செய்முறை பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment