மோசடி கல்வி நிறுவனங்களை தடுக்க நிபுணர்கள் குழுவை, பல்கலைகழக மானியக் குழுவான யு.ஜி.சி., அமைத்து உள்ளது. கல்வி நிறுவனங்களில் நடக்கும் முறைகேடுகள் மற்றும் அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றி ஆலோசனை வழங்குவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும், யு.ஜி.சி., தலைவரான ஆர்.பி. அகர்வால் அனுப்பியுள்ள கடிதம்: "யு.ஜி.சி., சட்டம் 1956 ஐ அமல்படுத்தவும், ஆலோசனை வழங்கவும் ஏழு பேர் குழுவை யு.ஜி.சி., அமைத்துள்ளது. இக்குழுவில், கர்நாடக பல்கலை முன்னாள் துணைவேந்தர், ஏ.எம்.பதான், பாரதிதாசன் பல்கலை முன்னாள் துணைவேந்தர், தங்கமுத்து, டில்லி, இந்தியன் சட்டப்பள்ளி முன்னாள் இயக்குனர், சந்திரசேகர பிள்ளை, அவினாசிலிங்கம் பல்கலை துணைவேந்தர் ஷீலா ராமச்சந்திரன், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை முன்னாள் இணை செயலர் சகாய், யு.ஜி.சி., இணைசெயலர் கே.பி.சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இக்குழுவினர் உயர்கல்வியில் வேகமாக ஏற்படும் மாற்றங்கள், உலகமயமாக்கல், தனியார் மயம், தனியார் கல்வி நிறுவனங்களின் பெருக்கம், சில கல்வி நிறுவனங்களில் நடக்கும் முறைகேடுகள் மற்றும் அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகள், கல்வி நிறுவனங்களுக்கு தேவையான விரிவாக்கம் மற்றும் அவற்றுக்கு தேவையான நிதி வழங்கல் போன்றவை குறித்து பலமுறை கூடி விவாதித்துள்ளது.
உயர் கல்வியில் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பல்கலைகளின் துணைவேந்தர்களிடம், இதுதொடர்பான கருத்து கேட்க, குழு முடிவு செய்துள்ளது. துணைவேந்தர்கள் தங்கள் கருத்துக்களை, இக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பலாம். இவ்வாறு, கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment