மேல்நிலை பிரிவுக்கு கணித ஆசிரியர் இல்லாமல் 22 ஆண்டுகளாக பரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. உடனடியாக நிரந்தர கணித ஆசிரியரை நியமிக்க வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகளுக்கு மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு மேல்நிலைப்பள்ளி
நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா பரப்பாடியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கூடம் 1992–ம் ஆண்டு வரை உயர்நிலை பள்ளியாக இருந்தது. பின்னர் மேல்நிலை பள்ளிக்கூடமாக தரம் உயர்ந்தது.
பரப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள பாப்பான்குளம், ஏமன்குளம், காமராஜர்நகர், பாரதிநகர், சீயோன்மலை, காத்தநடப்பு, சடையனேரி, வடக்கு விஜயநாராயணம், தெற்கு விஜயநாராயணம் உள்பட பல கிராமங்களைச் சேர்ந்த மாணவ–மாணவிகள் இந்த அரசு பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறார்கள்.
தற்போது சுமார் 600 பேர் வரை படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் உள்பட 22 ஆசிரிய–ஆசிரியைகள் வேலை பார்த்து வருகிறார்கள்.
கணித ஆசிரியர் இல்லை
மேல்நிலை பள்ளிக்கூடமாக தரம் உயர்த்தப்பட்ட பின்பு கடந்த 22 ஆண்டுகளாக மேல்நிலை பிரிவுக்கு கணித ஆசிரியர் நியமிக்கப்படவில்லை என்று மாணவர்களும், பெற்றோரும் வேதனை தெரிவித்து உள்ளனர். மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் படிப்பு பிளஸ்–2.
இதில் கணிதப்பிரிவை தேர்ந்து எடுக்கும் மாணவ–மாணவிகள் என்ஜினீயரிங் உள்பட பல்வேறு உயர் படிப்புகளுக்கு செல்ல விரும்புவார்கள். ஆனால், கணித ஆசிரியர் இல்லாததால் பரப்பாடி அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்கள், தாங்களே கணித பாடத்தை படிக்கும் நிலை நிலவுகிறது.
தொடர்ந்து புகார்கள் வந்ததையடுத்து கடந்த மாதம் நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு பள்ளிக்கூடத்தில் ஆய்வு செய்தார். பின்னர் அவர், வள்ளியூர் அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்தில் வேலை பார்த்து வரும் கணித ஆசிரியரை வாரந்தோறும் 3 நாட்கள் பரப்பாடி பள்ளிக்கூடத்துக்கு வந்து பிளஸ்–1, பிளஸ்–2 மாணவர்களுக்கு பாடம் நடத்த உத்தரவிட்டார்.
நியமிக்க கோரிக்கை
இருந்தாலும், மாணவ–மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு, பரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நிரந்தர கணித ஆசிரியரை நியமிக்க வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள், சுற்றுவட்டார மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment