சென்னை தாம்பரத்தில் நடைபெற்று வரும் மாநில கணித, அறிவியல் கண்காட்சியில் மாணவர்களின் படைப்புக்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது.மாநில அளவிலான ஜவாஹர்லால் நேரு அறிவியல் மற்றும் கணிதக் கண்காட்சி கிழக்குத் தாம்பரத்தில் உள்ள ஜெய்கோபால் கரோடியா தேசிய மேல்நிலைப் பள்ளியில் நேற்று முதல் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
பள்ளி கல்வித்துறை சார்பில் மூன்று நாட்கள் இடம்பெறும் இக்கண்காட்சியில், ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 4 மாணவர்கள் 3 வழிகாட்டி ஆசிரியர்கள் உள்பட 256 பேர் பங்கேற்கின்றனர். இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையம், கல்பாக்கம் அணுஉலை, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை, பெரியார் அறிவியல் தொழில் நுட்ப மையம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம் ஆகியவை சார்பில் தனிகாட்சி அரங்குகள் இடம் பெற்றுள்ளன. விவசாயம், ஆற்றல், உடல்நலம், சுற்றுச்சூழல், வளங்கள் ஆகிய 5 உட்தலைப்புகளிலும் கண்காட்சி நடைபெறுகிறது.
இந்த கண்காட்சியில் மாணவர்களின் அறிவியல் படைப்புக்களாக வைக்கப்பட்டுள்ள சைக்கிள் இன்வேட்டர், இயற்கை முறையில் கொசு ஒழிக்கும் ஐந்திற்கும் மேற்பட்ட செயன் முறைகள், மண் இல்லா விவசாயம், காது கேளாதோர் பாட்டுக் கேட்கும் விலை குறைந்த நவீன கருவி, இயற்கை மூலிகை நறுமணத்தினை வீடெங்கும் பரவச் செய்யும் மருத்துவ குளிரூட்டி போன்றவை மாணவர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
மாணவர்களின் அறிவுக்கு தீனி போடும் இக்கண்காட்சியில் ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமான மாணவர்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டதால் அவர்களால் கண்காட்சியை சரிவர பார்வையிட முடியவில்லை. திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்வது போல், போங்க.. போங்க.. என்று ஏற்பாட்டாளர்கள் தள்ளிக் கொண்டே இருந்ததால், மாணவர்களால் பொறுமையாக கண்காட்சியை பார்வையிட முடியவில்லை.
இது குறித்து கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பாலகிருஷ்ணனிடம் கேட்டபோது, ''மூன்று நாள் கண்காட்சியிலும் எந்த எந்த பள்ளிகள் என்றைக்கு பங்கேற்க வேண்டும் என்று சுற்றறிக்கை மூலம் அனுப்பப்பட்டு இருந்தது. நாளை பல பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் அவர்களும் இன்றைக்கே வந்துவிட்டார்கள்.
அதுவுமில்லாமல், சில பள்ளிகளில் இருந்து அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் வந்து விட்டார்கள். நேற்றைய தினம் 20,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இக்கண்காட்சியை பார்வையிட்டு சென்றுள்ளனர். இன்றைய தினம் மட்டும் 80,000க்கும் அதிகமான மாணவர்கள் வந்து பார்வையிட்டுள்ளனர். இன்றைக்கு எல்லா மாணவர்களாலும் கண்காட்சியை சரியாக பார்க்க முடியவில்லை என்பதில் எங்களுக்கும் வருத்தம்தான்" என்றார்.
நாளை மதியம் 2.30 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சி, பரிசளிப்பு நிகழ்ச்சியுடன் நிறைவு பெற இருக்கிறது.
செ.கிரிசாந்
No comments:
Post a Comment