இன்ஜினியரிங் கல்லூரிகளில் படிக்கும் 65 சதவீதம் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்களின் வற்புறுத்தலின் காரணமாகவே இன்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்துள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பல முக்கிய பாடங்களில் குறைவான மதிப்பெண் பெற்றிருந்த போதிலும், பெற்றோர்களுக்காகவே அவர்கள் இன்ஜினியரிங் படிப்பதாகவும் தெரிய வந்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள 100 கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களிடம், அவர்கள் இன்ஜினியரிங் தேர்வு செய்ததற்கான காரணம் குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.
இதில் பெரும்பாலான மாணவர்கள், தங்களுக்கு விருப்பம் இல்லாமல் பெற்றோர்கள் வற்றுத்தலால் தான் இன்ஜினியரிங் படிப்பதாக பதிலளித்துள்ளனர். அவர்களிடம் தங்களின் எதிர்காலம் குறித்த பெரிய அளவிலான லட்சியங்கள் ஏதும் இல்லாததும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இது போன்று விருப்பம் இன்றி படிக்கும் மாணவர்களிடம் கல்லூரியில் சேர்ந்த முதல் நாளில் இருந்தே தொடர்ந்து அதிகப்படியாக அழுத்தம் காணப்படுவதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஆய்வின் போது மாணவர்கள் பலர் கூறுகையில், நான் ப்ளஸ் 2 தேர்வில், முதலில் கணக்கு பாடத்தில் பெயில் ஆகி விட்டேன். பின்பு மறுதேர்வு எழுதி இன்ஜினியரிங் சேர்ந்தேன். அப்போதும் நான் பெரிய அளவில் மதிப்பெண் ஏதும் பெறவில்லை.
இருப்பினும் என் வகுப்பில் படித்த பெரும்பாலானவர்கள் இன்ஜினியரிங்கை தேர்வு செய்ததால் நானும் அதில் சேர்ந்தேன் என தெரிவித்துள்ளனர். இதில் பெற்றோர்களின் அழுத்தமும், வற்புறுத்தலும் முக்கிய பங்கு வகித்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பெற்றோர்களின் வற்புறுத்தல் காரணமாக விருப்பமின்றி மாணவர்கள் படிப்பதால், அவர்கள் தங்களின் பாடங்களை புரிந்து படிக்கும் திறன் குறைவதாகவும், உடல் படிக்கும் மாணவர்களிடம் கூட சகஜமாக பழகும் இயல்பு குறைவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய மாணவர்களிடம் படிப்பின் மீதான ஆர்வம் குறைவதாலேயே கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவில் புதிய கண்டுபிடிப்புக்கள் என்பது இல்லாமலே போய் விட்டதாகவும் ஆராய்ச்சியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment