மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களின் ஊதியத்தை மாற்றியமைக்கும் 7 வது ஊதியக் கமிஷன் அறிக்கை அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படுகிறது.
48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தையும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தையும் மாற்றி அமைப்பதற்காக நீதிபதி ஏ.கே. மாத்தூர் தலைமையில் 7-வது ஊதியக் கமிஷனை முந்தைய மன்மோகன் சிங் அரசு அமைத்தது. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படி ஊதியக் கமிஷன் அமைப்பது வழக்கமான ஒன்றாகும்.
7-வது ஊதியக் கமிஷன், தனது பரிந்துரைகளை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. அறிக்கை தாக்கல் செய்வது தொடர்பாக நீதிபதி ஏ.கே. மாத்தூர் டெல்லியில் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், 7-வது சம்பள கமிஷன் அறிக்கை அடுத்த மாத இறுதியில் அரசிடம் தாக்கல் செய்யப்படும் என கூறினார்.
இந்த சம்பள கமிஷனின் பரிந்துரைகள், அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும்.
7- வது ஊதிய கமிஷனை பரிந்துரை செய்தால் அடுத்த நிதியாண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளமாக ரூ .1 லட்சம் கோடிக்கும் மேல் செலவு பிடிக்கும் என மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதிய விகிதம், நடப்பு நிதியாண்டில் ரூ. 1 லட்சத்து 619 கோடி செலவாகிறது. 7- வது ஊதிய கமிஷன் பரிந்துரையால், 2016-17-ம் நிதியாண்டில் 16.79 சதவீதம் அதிகரித்து ரூ. 1.16 லட்சம் கோடியாகவும், 2017-18 ம் நிதியாண்டில் ரூ. 1.28 லட்சம் கோடியாகவும் அதிகரிக்கும்.
அதே போன்று நடப்பாண்டில் மத்திய அரசு ஊழியர்களின் ஒய்வூதியதாரர்களுக்கான செலவு ரூ. 88,521 கோடியாகும். இது 7-வது ஊதியக் கமிஷன் பரிந்துரையின்படி 2016-17-ம் நிதியாண்டில் ரூ.1.02 லட்சம் கோடியாகவும், 2017-18-ம் நிதியாண்டில் ரூ. 1.12 லட்சம் கோடியாகவும் அதிகரிக்கும்.
No comments:
Post a Comment